தமிழ்தேசியத்தை மலினப்படுத்த ஜே.வி.பி சூட்சுமமாக காய் நகர்த்துகிறது..

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசியத்தை மலினப்படுத்த ஜே.வி.பி சூட்சுமமாக காய் நகர்த்துகிறது..

தமிழ் தேசியத்தை மலினப்படுத்துவதற்கு ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சூட்சுமமாக காய்களை நகர்த்தி வருகின்றது. அச்செயற்பாடு தமிழினத்தின் இருப்புக்கு மிகப் பெரிய ஆபத்து என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஜே.வி.பி. ‘அனைவரும் இலங்கையர்’ என்ற அடையாளத்துக்குள் வர வேண்டுமென்ற கோசத்தை முன்னெடுப்பதானது தமிழ்த் தேசியக் கோட்பாட்டை கரைப்பதையே அடிப்படை இலக்காக கொண்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஜே.வி.பியானது தேசிய மக்கள் சக்தி என்ற போர்வையில் தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. அந்தத் தரப்பு பாராளுமன்றத்துக்கும் அதிகாரம் கோரி இப்போது தமிழ் மக்களை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது.

ஜே.வி.பியை பொறுத்தவரையில் அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளத்துக்குள் சங்கமிக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது. 

தமிழ் மக்கள் தங்களுடைய தனித்துவத்தையும் இருப்பையும் அடையாளத்தையும் உறுதி செய்வதற்காகவே கடந்த ஏழு தசாப்தங்களாக போராடி வருகின்றார்கள்.

தமிழ் மக்களின் அபிலாஷைகள் இதுவரையில் பூர்த்தி செய்யப்படாத நிலைமையே காணப்படுகிறது. அவர்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வு வழங்கப்படவில்லை. ஜே.வி.பியிடம் அதுகுறித்த தெளிவான நிலைப்பாடு இல்லை.

அத்தகையதொரு நிலைமையில், தமிழர்களை ஜே.வி.பியின் இலங்கையர் என்ற அடையாளத்துக்குள் சங்கமிக்க வைக்கும் முயற்சியானது தமிழ்த் தேசியத்தை மலினப்படுத்துவதையே நோக்கமாக கொண்டிருக்கிறது.

ஆகவே, இந்த விடயத்தில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தெளிவுற வேண்டியது அவசியமானது. மாற்றம் அவசியம் என்ற நிலைப்பாட்டில் தமிழ்த் தேசியத்தை பெருந்தேசியத்துக்குள் கரைக்கும் சூட்சுமமான நகர்வுகளுக்கு துணை போகக்கூடாது. அவ்விதமான நிலைமை ஏற்படுமாயின், தமிழினத்தின் இருப்புக்கே ஆபத்தாகிவிடும் என்றார்.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு