கடும் காற்று – கடல் கொந்தளிப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

ஆசிரியர் - Admin
கடும் காற்று – கடல் கொந்தளிப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளில் அவ்வப்போது கடும் காற்று வீசக்கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளத்திலிருந்து, மன்னார் ஊடாக, காங்கேசன்துறை வரையும், ஹம்பாந்தோட்டையிலிருந்து, பொத்துவில் ஊடாக, கல்முனை வரையான கடற்பகுதிகளிலும் காற்றானது மணிக்கு 60 முதல் 65 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்போது கடலானது கொந்தளிப்பாக காணப்படும். ஏனைய கடற்பகுதிகளிலும் சற்று அதிகரித்த வேகத்தில் காற்று வீசும். இதனால் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை நாட்டுக்குள்ளும் கடும் காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. மணிக்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் வீசுகின்ற கடும் காற்று காரணமாக மேல் மாகாணத்தில் இன்று காலை 153 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. தெஹிவளையில் 15 வீடுகளும், ஹோமாகமையில் 75 வீடுகளும், பிலியந்தலையில் 5 வீடுகளும், இரத்மலானையில் 20 வீடுகளும், மஹரகமையில் 15 வீடுகளும், கடுவலை ஒரு வீடும், கெஸ்பேவையில் 15 வீடுகளும், மொரட்டுவையில் 7 வீடுகளும் இவ்வாறு சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் சேதமங்களை மதிப்பிட்டு, நட்டஈடு வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்தார். அமைச்சர் துமிந்த திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக பிரதீப் கொடிபிலி தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு