வவுனியா மாவட்டத்தில் நேற்று இரவு பாரிய சத்தத்துடன் நில அதிர்வு!

ஆசிரியர் - Editor I
வவுனியா மாவட்டத்தில் நேற்று இரவு பாரிய சத்தத்துடன் நில அதிர்வு!

வவுனியா மற்றும் மதவாச்சி உள்ளிட்ட பல கிராமங்களில் நேற்று (18) இரவு 11 மணியளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. 

அந்த வகையில் வவுனியா மற்றும் மதவாச்சியின் பல கிராமங்களில் 2.3 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக புவிசரிதவியல், நில அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதனால் சேதங்கள் ஏதும் ஏற்படாத நிலையில் மக்கள்  தங்களது வீடுகளில் ஐன்னல்கள், கதவுகள் சில நொடிகள் பலத்த சத்தத்துடன் அதிர்ந்ததாக தெரிவிக்கின்றனர். வாழ்க்கையில் முதன் முறையாக இதுபோன்ற அனுபவத்தை தாம் உணர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, பெரியளவில் அதிர்வுகளை உருவாக்காத மெல்லிய அதிர்வாகவே இதைக் கருதவேண்டியுள்ளதாக சர்வதேச நில அதிர்வுகளை ஆராய்ந்து பதிவிடும் மையமான Volcana Discovery தெரிவிக்கிறது.  

மேலும் இலங்கை நேரம் இரவு 11.02 மணியளவில் குறித்த நில அதிர்வு என உணரப்படும் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் வவுனியா மாவட்டத்தின் வடமேற்கு பகுதியின் 5 சதுரகிலோமீற்றர் பரப்பளவில் அதிர்வுகளை அதிகமாக உணரக்கூடியதாக இருந்ததாகவும் volcana discovery தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு