ஒலுவில் அஷ்ரப் நகர் பகுதி மக்களது அவல நிலைக்கு தீர்வு எப்போது (video)

ஆசிரியர் - Editor III
ஒலுவில் அஷ்ரப் நகர் பகுதி மக்களது அவல நிலைக்கு தீர்வு எப்போது (video)

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் பகுதி மக்களது பிரச்சினைகளை ஆராய்கின்றது இச்செய்தி பெட்டகம்.

 

இன்று அப்பகுதி மக்கள் வீதி மறியல் போராட்டம் முன்னெடுத்து தமது பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கேட்டுள்ளனர்.

குறிப்பாக வீதி அபிவிருத்தி திணைக்களம் உட்பட உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு தமது பிரச்சினைகளை முன்வைத்தும் எதுவித பலனும் கிடைக்கவில்லை என பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளனர்.

குறித்த அஷ்ரப் நகரப்பகுதி மக்களின் அன்றாட ஜீவனோபாய நடவடிக்கைகள் உட்பட ஏனைய செயற்பாடுகள் இன்று நான்கு மாதத்திற்குமேலாக பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வருட முற்பகுதியில் இந்நகர் பகுதியில் பெய்த அடை மழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டிருந்தது.

இந்த வெள்ளம் காரணமாக இப்பகுதி பிரதான வீதிகள் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியதுடன் ஒலுவில் நகரத்தையும் அஷ்ரப் நகரையும் இணைக்கின்ற பிரதான பாலம் ஒன்றும் பாரிய உடைப்பெடுத்துள்ளது.

இதனால் வழமை போன்று செயற்படுகின்ற இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சேவையும் இடம்பெறவில்லை எனவும் இச்சேவை தடைப்பட்டுள்ளதனால் பாடசாலைக்கு தங்கள் பிள்ளைகள் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டினையும் மக்கள் முன்வைத்துள்ளனர்.

சுமார் 125 குடும்பங்கள்  வாழ்கின்ற இப்பகுதியில் வீடு இல்லாப்பிரச்சினை பொது மையவாடி பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.

அத்துடன் குறித்த அஷ்ரப் நகரில் இருந்து பாலம் உடைவு காரணமாக ஒலுவில் பகுதியை நோக்கி அத்தியவசியத் தேவைக்காக முச்சக்கரவண்டி ஒன்றிற்கு தலா 2000 ரூபா செலுத்தி செல்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

இது தவிர இப்பகுதியில் 4 நாட்களுக்கு முன்னர்  வயது 4 சிறுவன் ஒருவன் மரணமடைந்ததாகவும் குறித்த சடலத்தை ஒலுவில் நகரில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பல்வேறு சிரமங்களை தாம் எதிர்கொண்டதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு