முள்ளிவாய்க்காலில் மனைவி பிள்ளைகளுடன் சேர்த்து தன் குடும்பத்தில் 12 பேரை பறிகொடுத்த தந்தையின் உருக்கம்...

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்காலில் மனைவி பிள்ளைகளுடன் சேர்த்து தன் குடும்பத்தில் 12 பேரை பறிகொடுத்த தந்தையின் உருக்கம்...

யுத்தத்தின்போது மனைவி, இரண்டு பிள்ளைகள் உட்பட 12 உறவுகளை பறிகொடுத்த தந்தை ஒருவர் நேற்று  (18) முள்ளிவாய்க்கால் கடற்கரையில் பிதிர்க்கடன் நிறைவேற்றி அஞ்சலி செலுத்தி தனது சோகத்தடங்களை பதிவு செய்துள்ளார். 

அவர் பகிர்ந்துகொண்டதாவது:கிளிநொச்சி திருவையாற்றினை நிரந்தர வதிவிடமாக கொண்ட எங்களுடைய உறவுகள் 25 பேர் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து முல்லைத்தீவு வலயர்மடம் பகுதியில் பதுங்கு குழிகள் அமைத்து அங்கே இருந்தோம்.

13.02.2009 அன்று நள்ளிரவு வேளையில் பாரிய சத்தம் கேட்டது. நாங்கள் இருந்த பதுங்கு குழிக்கு மேலுள்ள மரத்தின் மீது எறிகணைகள் விழுந்தன. என்னுடைய உறவுகள் 12 பேர் அவ்விடத்திலேயே இறந்துவிட்டனர். 

அதில் நானும் காயமடைந்து சுயநினைவற்றிருந்தேன். அந்த இடத்தில் எங்களை பார்ப்பதற்கு யாருமே இருக்கவில்லை. அங்கே 13 பேர் காயமடைந்திருந்தோம். 

நான்கு தினங்கள் கழித்து எங்களை ICRC கப்பல் மூலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்கள். அங்கே வைத்தியசாலையில் வைத்தே நடந்த அசம்பாவிதம் எனக்கு தெரியவந்தது. 

என்னுடைய மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்ததாக அறிந்துகொண்டேன்.அதன் பின்னர், சில வருடங்கள் கழித்து மீள் குடியமர எமது சொந்த இடத்துக்கு வந்து தற்போது அங்கேயே வசிக்கிறோம். 

எமது கடந்த கால நிலையை என்றுமே மறக்கமுடியாது. ஒவ்வொரு வருடமும் மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் நினைவுநாளுக்கு வந்து எமது உறவுகளுக்கு அஞ்சலி செலித்தி வருகிறேன் என கண்ணீர் மல்க கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு