சூதாடிக் கொண்டிருந்தபோது பொலிஸாரை கண்டு தப்பியோட முயன்றவர் குழியில் விழுந்து பலி..

ஆசிரியர் - Editor I
சூதாடிக் கொண்டிருந்தபோது பொலிஸாரை கண்டு தப்பியோட முயன்றவர் குழியில் விழுந்து பலி..

கொட்டாவ, ருக்மலே பகுதியில் சில நபர்களுடன் இணைந்து பணத்துக்கு சூதாடிக் கொண்டிருந்த ஒருவர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது அருகில் இருந்த தண்ணீர் நிரம்பிய கற்குவாரியொன்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபராவார்.இவர், சில நபர்களுடன் இணைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அப்பகுதிக்கு சுற்றிவளைப்புக்காக சென்றிருந்த பொலிஸ் குழுவொன்று சந்தேக நபர்களை பிடிப்பதற்கு முயன்றுள்ளது.

இதன்போது இவர் ,பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக மூன்று நபர்களுடன் அருகில் இருந்த 30 அடி ஆழமான தண்ணீர் நிரம்பிய கற்குவாரிக்குள் குதித்துள்ளார். 

இந்த கற்குவாரியில் குதித்த ஏனைய மூவரும் பொலிஸாரிடமிருந்து தப்பித்து வீடு திரும்பியுள்ள நிலையில் உயிரிழந்தவர் மாத்திரம் காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில் அப்பிரதேசவாசிகள் கற்குவாரியில் நிரம்பிய நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது குழியினுள் இருந்து உயிரிழந்தவரது சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு