2030ல் கண்ணிவெடியற்ற நாடாக இலங்கை மாறும், இந்த ஆண்டு இறுதிக்குள் பெருவாரியான பிரதேசங்கள் அபாய வலயத்திலிருந்து நீங்கும்...

ஆசிரியர் - Editor I
2030ல் கண்ணிவெடியற்ற நாடாக இலங்கை மாறும், இந்த ஆண்டு இறுதிக்குள் பெருவாரியான பிரதேசங்கள் அபாய வலயத்திலிருந்து நீங்கும்...

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று (06) விசேட நிகழ்வும் கிரிக்கெட் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸும் கலந்துகொண்டார்.

இதன்போது உரையாற்றிய வட மாகாண ஆளுநர், கண்ணிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது 2030ஆம் ஆண்டுக்குப் பின்னரே இலங்கையை கண்ணிவெடி அற்ற நாடாக பிரகடனப்படுத்த முடியும் என்ற ஒரு நிலைப்பாடு எழுந்ததாகவும், 

எனினும் இந்த வருட இறுதிக்குள் பெரும்பாலான வகையில் கண்ணிவெடி அகற்றப்பட்டு மக்கள் தங்களுடைய குடியிருப்புகளுக்குள் செல்லக்கூடிய நிலை ஏற்படும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் சர்வதேச அமைப்புகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இதன்போது நன்றி தெரிவித்த ஆளுநர், மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளுக்கு கண்ணிவெடி அகற்றப்படாமை பாரிய சவாலாக காணப்படுவதாகவும் கூறினார். 

அத்தோடு, பூநகரி மற்றும் முகமாலை பகுதிகளில் அதிகளவு கண்ணிவெடி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இந்த செயற்பாடுகளில் பணியாற்றிக்கொண்டிருப்போர், தங்களின் உயிர்களை பணயம் வைத்து ஆற்றிவரும் சேவைக்காகவும் ஆளுநர் நன்றி தெரிவித்ததோடு, மீள்குடியேற்ற செயற்பாடுகளை நிறைவு செய்ய கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, நிலக்கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் பெண்களை ஈடுபடுத்திய நாடு என்ற பெருமையை இலங்கை கொண்டுள்ளது. அந்த வகையில், 

இலங்கையில் பெண்கள் முதன் முதலாக கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை வவுனியாவில் ஆரம்பித்தமையை நினைவுபடுத்திய ஆளுநர், கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு விசேடமாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் கூறினார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு