ஹவுதி கிளர்ச்சிக்குழுவை அடக்குவதற்கு கடற்படைக் கப்பலை அனுப்புவதால் என்ன பயன்?

ஆசிரியர் - Editor IV
ஹவுதி கிளர்ச்சிக்குழுவை அடக்குவதற்கு கடற்படைக் கப்பலை அனுப்புவதால் என்ன பயன்?

நாட்டு மக்கள் பாரிய பாொருளாதார பிரச்சினைகளை எதிர் கொண்டுவரும் நிலையில் ஹவுதி கிளர்ச்சிக்குழுவை அடக்குவதற்கு அரசாங்கம் 250மில்லியன் ரூபா செலவிட்டு கடற்படை கப்பலை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் நன்மை என்ன என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

250 மில்லியன் ரூபா செலவழித்து ஹவுதி கிளர்ச்சிக்குழுவை அடக்குவதற்கு கடற்படையின் கப்பல் ஒன்றை பயன்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு அன்றாட உணவு வேளை ஒன்றை வழங்க முடியாமல் இருக்கும் நிலையில், குறிப்பாக நாட்டில் இருக்கும் 220 இலட்சம் பேரும் பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டத்துடன் இருந்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் 250 மில்லியன் ரூபா செலவழித்து எமது கடற்படையின் கப்பலை ஹவுதி கிளர்ச்சிக்குழுவை அடக்குவதற்கு அனுப்புவதன் மூலம் எமக்கு கிடைக்கப்போகும் நன்மை என்ன என கேட்கிறோம்.

குறைந்தபட்சம் அரசாங்கம் இவ்வாறு 250 மில்லியன் ரூபாவை முதலீடுசெய்வதன் மூலம் எமது நாடு கடன் பெற்றுக்கொண்டுள்ள நாடுகள் எமது கடனில் 25 பில்லியனாவது குறைப்பதாக வாக்குறுதி வழங்கி இருக்கிறதா? எமது நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையில் நாட்டுக்கு சாதகமான விடயங்களுடனே சர்வதேசத்துடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அர்ப்பணிப்புக்காக சர்வதேசம் எமக்கு வழங்கப்போகும் பிரதி உபகாரம் என்ன? இவ்வாறான ஏதாவது இணக்கப்பாடுடனா அரசாங்கம் இந்த 250 மில்லியன் ரூபாவை செலவழிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது?

அதனால் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு நாட்டு மக்கள் எதிர்கொண்டுவரும் அடிப்படை பிரச்சினை விளங்குவதில்லையா? பாடசாலை மாணவர்களுக்கு கணனி வசதி இல்லாமல் இருக்கிறது.

இந்த 250 மில்லின் ரூபாவையும் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான கணனிகளை பெற்றுக்கொள்ள ஒதுக்க முடியும்தானே. எனவே நாட்டில் இவ்வளவு பாரிய தேவைகள் இருக்கும்போது அரசாங்கம் எதற்காக இவ்வாறு செயற்படுகிறது என கேட்கிறோம் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு