புதுக்குடியிருப்பில் வீட்டுக் கிணற்றில் மண்ணெண்ணை! வாளியில் அள்ளி தீ வைத்து காட்டும் கிணற்று உரிமையாளர், குவியும் மக்கள்..

ஆசிரியர் - Editor I
புதுக்குடியிருப்பில் வீட்டுக் கிணற்றில் மண்ணெண்ணை! வாளியில் அள்ளி தீ வைத்து காட்டும் கிணற்று உரிமையாளர், குவியும் மக்கள்..

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட உடையார்க்கட்டு, குரவில் கிராமத்திலுள்ள வீடொன்றின் கிணற்றுக்குள் கிணற்று நீருடன் மண்ணெண்ணெயும் வெளியேறுவதாக நேற்று (07) கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,கடந்த நாட்களில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் குரவில் கிராமத்தில் உள்ள இவ்வீட்டின் கிணற்றில் வெள்ள நீர் நிரம்பிய நிலையில், கிணற்றினை சுத்தம் செய்வதற்காக நேற்று கிணற்று நீரை நீர் இறைக்கும் இயந்திரம் கொண்டு இறைத்துள்ளார்கள். 

அப்போதே கிணற்று நீருடன் மண்ணெண்ணெய் கலந்திருந்தமை கண்டறியப்பட்டு, அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இது தொடர்பில் காணி உரிமையாளர் கூறுகையில், 2012ஆம் ஆண்டு மீள்குடியேறிய பின்னர், 23 அடி ஆழம் கொண்ட கிணறு தோண்டப்பட்டு கட்டப்பட்டுள்ளது. 

தற்போது கிணற்றினை சுத்தம் செய்யும்போது கிணற்று நீர் முதலில் கருநிறத்தில் காணப்பட்டுள்ளது. பின்னர், மண்ணெண்ணெய் மணம் வீசத் தொடங்கியுள்ளது. கிணற்று நீரின் மேற்படலத்தில் மண்ணெண்ணெய் தொடர்ச்சியாக காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாளியால் தண்ணீரை அள்ளி, அதில் ஒரு இலையினை நனைத்து, அதனை பற்றவைத்தபோது அந்த இலை எரிந்துள்ளது. 

அந்த திரவத்தில் மண்ணெண்ணெய் மணம் வீசியது.வீட்டின் உரிமையாளர்கள் கிராம சேவையாளருக்கு தொடர்பினை ஏற்படுத்தி விடயம் குறித்து தெரியப்படுத்த, கிராம சேவையாளர் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் கிணற்றினை பார்வையிட்டுள்ளனர். 

அவர்கள் கிணற்றில் எண்ணெய் கலந்த நீரின் மாதிரியை எடுத்துச் சென்றதுடன், இது தொடர்பில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு மேற்கொண்டு சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அயலவர்களை விசாரித்தபோது, காணிக்கு அருகில் விடுதலைப்புலிகள் காலத்தில் விடுதலைப்புலிகளின் முகாம் ஒன்று காணப்பட்டுள்ளதாகவும் அந்த காலத்தில் நிலத்தில் புதைக்கப்பட்ட மண்ணெண்ணெய் லீக்காகி தற்போது நிலத்தடி நீரில் கசிந்துள்ளதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என தெரிவித்துள்ளார்கள்.

தற்போது நிலத்தடி நீர்மட்டம் உயரமாக காணப்படுவதால் தொடர்ச்சியாக இறைத்து நீர்வரத்துப் பகுதியினை கண்டறிய முடியாத நிலை காணப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை, குடிநீர் மற்றும் வீட்டுத் தேவைக்காக பயன்படுத்தி வந்த கிணற்றில் மண்ணெண்ணெய் கலந்திருப்பதால் குடிநீரினை பெற்றுக்கொள்வதற்கும் குடித்தல், நீராடுதல் போன்ற தேவைகளுக்காக நீரை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும், 

வீதிக்கு சென்று பொதுக்கிணற்றில் இருந்தே குடிநீரினை தாங்கள் பெற்றுக்கொள்வதாகவும் கிணறு அமைந்துள்ள வீட்டில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு