கோட்டாவைப் போல உண்மையை மறைக்கிறார் ரணில்!

ஆசிரியர் - Admin
கோட்டாவைப் போல உண்மையை மறைக்கிறார் ரணில்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் போன்று தற்போதைய அரசாங்கமும் உண்மைகளை மறைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சி ஒன்றியத்தின் வாராந்த செயற்குழுக் கூட்டம் திங்கட்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும் அதனால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையையும் அரசியலாக்காது முழுமையான உண்மையைத் தேடுவதே எதிர்க்கட்சியின் நோக்கமாகும். அரசாங்கம் உண்மைகளையும் தரவுகளையும் மறைப்பதால் எதிர்க்கட்சி என்பதால் எமக்கு உண்மைகள் தெரியாது. இது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இங்கு உண்மையை மறைப்பது என்பதிலிருந்து கைகளில் இரத்தம் தோய்ந்த நபர்களின் சதியோ என்று சந்தேகம் எழுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்கு உண்மை மறைக்கப்படுவது மாத்திரம் இடம்பெற்றுள்ளதால் அரசியல் சாதகங்களைப் பொருட்படுத்தாமல், முழுமையான உண்மையை இங்கு வெளிக்கொணர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரிகளையும் ஏனைய காரணத்தை கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட அனைவரையும் தண்டிப்பதாக அளித்த வாக்குறுதிகளின் பிரகாரமே ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் கோட்டாபய ராஜபக்சவுக்கு 69 இலட்சம் மக்கள் ஆணை கிடைத்தது. அவர் அந்த உண்மையைத் தேடாது,உண்மையைக் கண்டறியாமல் பயங்கரவாத செயலை விசாரித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் பலரையும் அந்த நடவடிக்கைகளில் இருந்து நீக்கினார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு செயற்பாடுகளை பார்க்கும் போது உண்மையை தேடுவதை விட உண்மை மறைக்கப்பட்டுள்ளதையே மேற்கொண்டுள்ளதாக தோன்றுகிறது. இதன் காரணமாக உண்மையைக் கண்டறியும் பொறுப்பைக் கூட கோட்டாபய ராஜபக்ச புறக்கணித்துள்ளார். அவ்வாறே தற்போதைய அரசாங்கமும் செயற்படுகிறது.

கோட்டாபய ராஜபக்சவைப் பின்பற்றி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையை இந்த அரசாங்கமும் மறைத்து வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நேர்மையான, நம்பகமான,பக்கச்சார்பற்ற தேசிய விசாரணையைகை கோருகின்றேன். கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களைப் பார்க்கும்போது தேசிய விசாரணைகளில் அதிக நம்பிக்கை இல்லை. இவ்வாறான நிலையில் சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் முதல் பாகம் மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் குறைந்தபட்சம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது எதிர்க்கட்சித் தலைவரால் பரிசீலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் மேற்பார்வையில் மாத்திரம் அதனை பரிசீலிக்க சந்தர்ப்பம் வழங்குவதில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் கூட மீறப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4 காணொளி தொடர்பில் விசாரணை நடத்த அரசாங்கம் நியமித்துள்ள புதிய குழுவிற்கு இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களும் கர்தினாலும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இவ்வாறு புதிய குழுக்களை நியமிப்பதாலும் கூட உண்மை மூடி மறைக்கப்படுகிறது.

மேலும் இவ்வாறான தாக்குதலுக்கு இந்நாட்டில் உள்ள அனைத்து மதங்கள் மற்றும் இனங்களைச் சேர்ந்த தீவிரப்போக்குடையவர்களும் பொறுப்பாளிகளாவர். இந்த தீவிரவாதிகளால் இந்நாட்டின் தேசிய பாதுகாப்பு பறிபோனது. தாக்குதலின் உண்மை கண்டறியப்படாத வரை,இது தேசிய பாதுகாப்பிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மதங்களுக்கும் இனங்களுக்கும் இடையில் காணப்படும் நம்பமகற்ற தன்மையையும் சந்தேகத்தையும் நீக்க உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு