வடக்கு, கிழக்கில் மேலும் பல மனிதப் புதைகுழிகள்!

ஆசிரியர் - Admin
வடக்கு, கிழக்கில் மேலும் பல மனிதப் புதைகுழிகள்!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி போன்று வடக்கு, கிழக்கில் மேலும் பல மனிதப் புதைகுழிகள் காணப்படலாம் என்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை. சோ.சேனாதிராஜா அச்சம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச தரப்பினர் தலையீடுகளைச் செய்து, துறை சார்ந்த நிபுணர்களின் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் எனவும், அதன் மூலம் தமிழின அழிப்பு நடைபெற்றது என்பது உறுதியாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

'கொக்குத்தொடுவாயில் மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 17 எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன. அவை தொடர்பில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டியது அவசியமாகிறது.

இதேவேளை, வடக்கு, கிழக்கில் அசாதாரண காலத்தில் கடத்தப்பட்டவர்கள், காணாமலாக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் என்று ஆயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நடந்தது என்பது தற்போது வரையில் வெளிவராத நிலைமையிலேயே உள்ளது.

இந்நிலையில், வடக்கு, கிழக்கில் கொக்குத்தொடுவாய் போன்று மேலும் பல மனித புதைகுழிகள் இரகசியமாக காணப்படலாம் என்ற அச்சம் எமக்கு உள்ளது.

ஆகவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச தரப்பினர், வடக்கு, கிழக்கில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான தீர்மானத்தினை விரைந்து எடுத்து, துறை சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்தவர்களை பங்கேற்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதன் மூலம் தமிழினத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் வெளிப்படுவதுடன், திட்டமிட்ட வகையில் இன அழிப்பு நடைபெற்றுள்ளது என்பதும் உறுதிப்படுத்தப்படும்.

மேலும், இன அழிப்புச் செய்யப்பட்ட சமூகத்துக்கான இறுதி நீதியாக இன விடுதலையே வழங்கப்பட வேண்டும். இதனை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாகவும் இருக்கும்.

எனவே, மனித புதைகுழி விடயத்தில் உள்நாட்டு ஆய்வுகள், தடய சேகரிப்புக்களுக்கு அப்பாலான நடவடிக்கைகள் அவசியம் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு