சரத் வீரசேகர மனநோயாளி! - செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை.

ஆசிரியர் - Editor IV
சரத் வீரசேகர மனநோயாளி! - செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை.

கடற்படையில் சமையல்காரராக இருந்த சரத் வீரசேகர மனநோயாளியாகி விட்டார். இனவாதம் கக்குவதை சரத் வீரசேகர தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் எமது மக்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல, கிளர்தெழுவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வங்கித்தொழில் விசேட ஏற்பாடுகள் சட்ட மூல விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஒரு மனநோயாளி.அவர் கடற்படையில் சமையல்காரராகத் தான் இருந்துள்ளார்.

போர்க்காலத்தில் தொடர்ந்தும் அவரை சமையலறையில் வைத்திருந்ததன் காரணமாக ஒரு மனநோயாளி போல் தற்போது செயற்படுகின்றார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இடமளிக்க போவதில்லை என்கிறார்

அதே போல் சமஸ்டியை வழங்க முடியாது என்கின்றார். குருந்தூர் மலையில் தமிழர் வழிபாடுகளை நடத்த முடியாது என்கின்றார்.

இவ்வாறு சொல்வதற்கு இவர் யார்?எந்த அடிப்படையில் இவர் இவ்வாறு பேசுகின்றார் ? இருக்கு ஆதரவாக இருப்போர் யார்? இவரின் கருத்துக்கள் அரசியல் சாசனத்தையும்,அரசியமைப்பையும் எதிர்ப்பவையாகவே உள்ளன.

இப்போது பார்த்தால் கனடா உயர்ஸ்தானிகரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்கின்றார். அமெரிக்க தூதுவரை மிக மோசமாக சாடுகின்றார்.

இந்தியாவையும் அவர் சாடுகின்றார். வெளிநாடுகளின் நிதியை பெற்று சாப்பிட்டு வயிறு வளர்த்துக் கொண்டிருக்கும் சரத் வீரசேகர எங்களது நியாயமான உரிமைகள் நாங்கள் கோருகின்ற போது அதனை அவர் எந்த அடிப்படையில் எதிர்க்கின்றார்?

அதனால்தான் அவர் ஒரு மனநோயாளி என நாங்கள் கூறுகின்றோம்.அவரின் கருத்துக்களை இங்கு யாரும் எதிர்க்கவில்லை.

சரத் வீரசேகர மிக மோசமாக நடந்து கொண்டுள்ளார். அவரின் கட்சித்தலைமை அவரை அடக்கி வைத்திருக்க வேண்டும். அத்துடன் அவரை இந்த சபையிலிருந்து நீக்க வேண்டும். எமது மக்கள் சாதாரணமானவர்கள் அல்ல. போராடியவர்கள் குண்டுகளைத் தாங்கியவர்கள்.விடுதலை வேட்கை கொண்டவர்கள்.

தமிழினத்தை சீண்ட வேண்டாமென சரத் வீரசேகரவை எச்சரிக்கின்றோம். உங்களின் தடிப்பு கதைகளை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். எமது மக்கள் தொடர்ந்தும் மௌனமாக இருக்க மாட்டார்கள் தொடர்ந்தும் சரத் வீரசேகர இனவாதம் கக்கினால் எமது மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என சரத் வீரசேகரவுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு