நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் சிறப்புரிமையை பொலிஸார் மீறுகிறார்கள், என்ன செய்கிறீர்கள்? சஜித் காட்டம்...

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் சிறப்புரிமையை பொலிஸார் மீறுகிறார்கள், என்ன செய்கிறீர்கள்? சஜித் காட்டம்...

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளவிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டது எப்படி? 

அவருடைய சிறப்புரிமையை மீறிய பொலிஸார் மீது என்ன நடவடிக்கை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸ நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (07) ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை  முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 

நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் கீழ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி.க்கு நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள உரிமை இருக்கிறது. 

நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் 5 ஆம் உறுப்புரையில் அந்த உரிமை இருக்கிறது. என்றாலும் அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

அத்துடன் வடக்கில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக,  சிறப்புரிமை மீறப்பட்டமை தொடர்பாக  நாடாளுமன்றத்துக்கு வந்து உரையாற்ற உரிமை இருக்கிறது.  

அதேநேரம், நாடாளுமன்றத்துக்கு வந்து, சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்த பின்னர் பொலிஸ் நிலையத்துக்கு சென்று வாக்குமூலம் வழங்குவதாக அவர் பொலிஸாருக்கும் தெரிவித்திருக்கிறார்.

சபாநாயகராகிய உங்களுக்கும் தொலைபேசியில் அழைத்து தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைதுசெய்யும்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் 

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ  2015 மார்ச் மாதம் 3ஆம் திகதி வழங்கிய மிகவும் தெளிவான தீர்ப்பொன்று இருக்கிறது. அதனை நினைவூட்டுகின்றேன்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் தொடர்பாகவும் அவரின் கொள்கை தொடர்பாகவும் எங்களுக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. 

என்றாலும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இந்த சபைக்கு வருவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. நாடாளுமன்ற சபை அமர்வுக்கு வரும்போது அவரை கைதுசெய்ய முடியாது. 

அதனால் சபாநாயகராகிய நீங்கள், உடனடியாக சட்டப்பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கி, நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றார்.   

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு