SuperTopAds

மசாஜ் நிலைய உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது!!

ஆசிரியர் - Editor I
மசாஜ் நிலைய உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது!!

மசாஜ் நிலையமொன்றின் உரிமையாளரிடமிருந்து 10 ஆயிரம் ரூபா பணத்தை லஞ்சமாக பெற்ற முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மசாஜ் நிலையத்தின் செயற்பாடுகளை தடையின்றி தொடர்வதற்கு கடவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு வழங்குவதற்காக இவ்வாறு பணம் கோரப்பட்டதாக மசாஜ் நிலையத்தின் முகாமையாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.

முகாமையாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று கடவத்தை பிரதேசத்தில் திடீர் சோதனை நடத்தியதுடன், முகாமையாளரிடம் இருந்து உரிய தொகையை இலஞ்சமாக பெற்றதாக சந்தேகத்தின் பேரில் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

இந்நிலையில், கைதான சந்தேக நபர், சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்போது, கடமைக்கு சமுகமளிக்காத காரணத்தினால் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி முதல் சேவையிலிருந்து விலக்கப்பட்ட பொலிஸ் பரிசோதகர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கைதுசெய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் பரிசோதகரிடம் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.