யாழ்.தையிட்டி விகாரை சட்டவிரோதமானதா? ஒருங்கிணைப்பு குழு தீர்மானத்தை கேட்டதும் விழி பிதுங்கிய அதிகாரிகள்...

ஆசிரியர் - Editor I
யாழ்.தையிட்டி விகாரை சட்டவிரோதமானதா? ஒருங்கிணைப்பு குழு தீர்மானத்தை கேட்டதும் விழி பிதுங்கிய அதிகாரிகள்...

யாழ்.தையிட்டியில் அமைக்கப்பட்டது சட்டவிரோத விகாரை என தெல்லிப்பழை பிரதேச செயலக அபிவிருத்தி கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானம் உள்ளதா? என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மாவட்ட செயலக அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று புதன்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இரண்டாவது கலந்து உரையாடலின்போது பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கயேந்திரன் எழுப்பிய கேள்வி ஒன்றையடுத்தே அமைச்சர் அதிகாரிகளை வினாவியுள்ளார்.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை சட்டவிரோதமான விகாரை அதனை அகற்றி மக்களுடைய காணிகளை மக்களுக்கே பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

என பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அங்கயன் இராமநாதன் ஆகியோர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விகாரை கட்டும் வரை பார்த்திருந்த பின்னர் தற்போது அகற்றச் சொல்வது எவ்வளவு தூரம் சாத்தியமாகும்  என தனக்கு தெரியாது என்றார்.

இதன்போது குறிக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் விகாரை கட்டும்போது  அப்பகுதி  உயர் பாதுகாப்பு வலையமாக இருந்தபடியால் எமக்குத் தெரியாது என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் 2021 ஆம் ஆண்டு விகாரை கட்டுவதற்கு எதிராக தெல்லிபாழை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அப்போதைய தவிசாளராக இருந்தவர் இந்த சபையில் இருக்கிறார் என்றார். இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தையிட்டி விகாரை தொடர்பில் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டு மாவட்ட செயலகத்திற்கு அனுப்பப்பட்டது  என்றார்.

பிரதேச செயலக தீர்மானம் அனுப்பப்பட்டால் மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் என்ன தீர்மானம் எடுக்கப்பட்டது என அமைச்சர் டக்ளஸ் கேட்டதுடன் தீர்மானம் இருந்தால் காட்டுங்கள் என்றார்.

இதன்போது பதில் அளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் எங்களிடம் இல்லை மாவட்ட செயலகத்துக்கு தான் அனுப்பப்பட்டது என்றனர். அனுப்பப்பட்ட தீர்மானம் இருக்கிறதா என அமைச்சர் மாவட்ட செயலக அதிகாரிகளை பார்த்து கேட்டார் அதிகாரிகளின்  மௌனமாக ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

இதன்போது மீண்டும் குறிக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தற்போது ஒரு தீர்மானம் எடுப்போம்  தையிட்டியில் கட்டப்பட்டது சட்ட விரோத விகாரை தான், என கூற அதற்கு பதிலளித்த அமைச்சர் உங்களுடைய கருத்தை வேண்டுமானால் மாவட்ட செயலக அதிகாரிகள் பதிவு செய்வார்கள் அதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.

இதன்போது குறுக்கிட்ட செல்வராஜா கஜேந்திரன் தவிசாளரே நீங்களும் தையிட்டி விகாரை மக்களுடைய காணிகளில்  சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளது என்ற நிலைப்பாட்டில் தான் உள்ளீர்கள் ஏன் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என கேட்டார்.

இதன்போது பதில் அளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை ஆனால் நீங்கள் கூறுவதைப் போன்று தையிட்டி விகாரை தொடர்பில் ஏற்கனவே பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டமையால் அது தொடர்பில்  கூட்டத்தில் ஆராய்ந்த பின்னர்  மேலதிக விடையங்களைப் பற்றி பேசலாம் என தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு