யாழ் மக்கள் மீண்டுமொருமுறை அமானுஷ்ய பயத்தில்!

ஆசிரியர் - Admin
யாழ் மக்கள் மீண்டுமொருமுறை அமானுஷ்ய பயத்தில்!

யாழ்ப்பாணத்தின் சில பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் மீண்டுமொருமுறை அமானுஷ்ய பயத்தில் உறைந்து போயுள்ளார்கள்.

அங்குள்ள சில பிரதேசங்களில் மக்கள் மத்தியில் பேய்கள் தொடர்பான பயம் தோன்றியுள்ளது.பேயைக் கண்டதாகவும், அப்பேய் ஒரு கையில் இரத்தம் வடியும் கோழியை ஏந்தியுள்ளதைப் பார்த்ததாகவும் சிலர் கூறுகின்றார்கள்.

மிகவும் உயரமான, முகம் தெளிவற்ற, வெள்ளை ஆடையைப் போர்த்தியபடி பேய் உலாவுவதாக அவர்கள் கூறுகின்றார்கள். பேய் வெளியே வருவது அதிகாலை ஒரு மணி அளவிலாகும் என்கிறார்கள் அவர்கள்.

ஆவிகளின் தொல்லை இருப்பதால் இரவில் யார் பேசினாலும் கதவைத் திறக்காத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. அவர்கள் இரவில் செல்லும் பயணங்களையும் குறைத்துக் கொண்டுள்ளார்கள்.

வடமாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன் தனக்கு நாகம் ஒன்றின் உதவி உள்ளதாக யாழ்ப்பாணத்தில் கோயிலொன்றில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்தில் பங்குபற்றும் போது குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனக்கும் நாகத்துக்கும் பல வருடங்காக தொடர்புள்ளதாகக் கூறியுள்ளார்.தனது வாழ்க்கையின் மிக முக்கிய சந்தர்ப்பங்களில் நாகம் உதவியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அவர் சொல்லாமல் சொல்வதென்னவென்றால் வட மாகாண முதலமைச்சர் பதவி கிடைக்கும் போது அந்த நாகம் உதவி செய்துள்ளதாக குறிப்பிடுகின்றார்.

உயர்நீதிமன்ற நீதிபதியாகவிருந்து, பிரபுத்துவ அரசியலின் மூலம் அறிவு பெற்ற, ஆராயும் புத்தியுடைய அமைச்சர் விக்னேஸ்வரனே தனக்கு முன்னால் நாகம் தோன்றுவதாகக் கூறும் போது சாதாரண யாழ்ப்பாண மக்களுக்கு கண்முன்னால் பேய் தோன்றுவது ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல.

யாழ்ப்பாணத்தில் ஓரிடத்தில் பேயிருப்பதாக முதன் முதலில் தகவலை யாழ்ப்பாண சந்தைக்கு அதிகாலையில் கொண்டு வந்தவர் மானிப்பாயைச் சேர்ந்த சின்னையா கிரிதரன் ஆவார்.

“நான் இரவு வீட்டுக்கு வரும் போது பாதையில் வெள்ளைத்துணி போர்த்திய ஒருவரைக் கண்டேன். கையில் கறுப்புநிற பொதியொன்று இருந்தது.’யார்’ என்று கேட்ட போது ஒரேயடியாக அவர் காணாமல் போய் விட்டார். அது நிச்சயம் பேய்தான்” எனக் கூறினார் அவர்.

கதையைக் கேட்ட சந்தையிலிருந்த நண்பர்கள் சின்னையாவை கேலி செய்ததோடு எச்சரிக்கையும் செய்தார்கள். இந்தக் கதை பரவினால் ஆவிகளுக்குப் பயந்து போய் இந்த சந்தையின் வியாபாரமும் குறைந்து விடும். வாழ்க்கையை நடத்துவதிலும் சிரமம் ஏற்படும் என அவர்கள் கூறினார்கள்.

ஆகவே சின்னையாவின் இந்தக் கதையை யாருக்கும் கூறுவதில்லையென முடிவு செய்தார்கள். ஆனால் நான்கு நாட்கள் கூடச் செல்லவில்லை.மரக்கறி வாங்க வந்த ஒருவர் வியாபாரிகளுக்கு புதிய செய்தியொன்றைக் கூறினார்.

“தெரியுமா செய்தி? யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கிராமத்துக்கு நேற்று இரவு பேயொன்று வந்ததாக ஆட்களெல்லாம் பயந்து போய் இருக்கிறார்கள். அந்தப் பேயின் ஒரு கையில் கறுப்பு நிறக் கோழியொன்று உண்டென்றும் அந்தக் கோழி இரத்தம் வடிந்தபடி இருப்பதாகவும், அதனை பேய் அணைத்தபடி சென்றதாகவும் கூறுகின்றார்கள். முழு உடம்பையும் வெள்ளை ஆடையால் போர்த்தியபடி இருந்ததாம் அந்த உருவம்” என்று கூறினார் அவர்.

வியாபாரிகள் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மரக்கறி வாங்க வந்தவர் சைக்கிளில் ஏறி சென்றவுடன் மீண்டும் கலந்துரையாடத் தொடங்கினார்கள்.“அதுதான் நானும் கூறினேன். நான் கூறியதை நீங்கள் நம்பவில்லை. நானும் அதையே தான் கண்டேன். நான் கறுப்பு நிற பார்சல் என்று கூறினேன். ஆனால் அது கறுப்பு நிற கோழிதான்” என்று சின்னையா திரும்பவும் கூறத் தொடங்கினார்.

சிறிது நாட்களிலேயே யாழ்ப்பாணம் முழுவதும் பேய்க்கதை பரவி விட்டது. தமிழ் இணையத்தளங்கள் பலவற்றிலும் இச்செய்தி வெளியானது.

அதேவேளையில் சுகாதார அதிகாரிகள் இணையத் தள ஆசிரியர்களை எச்சரித்தார்கள்.”கடந்த முறையும் நீங்கள்தான் ஆவி இருப்பதாகக் கூறி முழு யாழ்ப்பாணத்தையும் பயமுறுத்தினீர்கள். யாழ்ப்பாண மக்கள் இன்புளுவன்சா காய்ச்சல் காரணமாகத்தான் இறந்தார்கள். தற்போது காலியிலும் அந்த நோய் காரணமாகத்தான் நோயாளிகள் இறக்கின்றார்கள். அதனால் தயவு செய்து இந்த வேலையை நிறுத்துங்கள்.

இனிமேல் யாழ்ப்பாணத்தில் பேய் உலாவுவதாக எழுத வேண்டாம்”.யாழ்ப்பாண சுகாதார அதிகாரிகள் இணையத் தள ஆசிரியர்களுக்கு விடுத்த வேண்டுகோள் சில இணையத் தளங்களில் வெளிவந்தாலும், “யாழ்ப்பாணத்தில் பேய்கள் இல்லை. அது பொய்” என எந்தவோரு இணையத்தளமும் பதிவிடவில்லை.

அடுத்த நாள் அவர்கள் பணிபுரிய வந்த போது சிலர் அவர்களைச் சந்திக்க வந்திருந்தார்கள். அவர்கள் சும்மா வரவில்லை. பேயின் படங்கள் இரண்டையும் கொண்டு வந்திருந்தார்கள்.

“நேற்று கமெராவில் பேயின் படம் பிடிபட்டுள்ளது” என்று கூறியபடி கராஜ் உரிமையாளரொருவர் பேயின் புகைப்படத்தை முதன் முதலாக காட்டினார்.

“நேற்று அதிகாலை சில அமானுஷ்யமான சத்தங்கள் கராஜிலிருந்து கேட்டன. நாம் காலையில் அங்கு சென்று பார்த்த போது வித்தியாசமாகத் தெரிந்ததால் சீ.சீ.ரி.வி கமெராவை பரிசோதித்த போது மங்கலாக இப்படங்கள் தெரிந்தன” என்று அவர் கூறினார்.

பேயோ ஆவியோ புகைப்படங்களில் அகப்படாது என்பது பேய்களை நம்புவோரின் கருத்தாகும். ஆனால் யாழ்ப்பாணப் பேய் சீ.சீ.ரி. வி காட்சிகளிலும் பதிவாகியுள்ளது.

கராஜ் உரிமையாளருக்குக் கிடைத்த யாழ்ப்பாணப் பேயின் புகைப்படத்தை யாழ்ப்பாணத்திலுள்ள இணையத்தளங்கள் மற்றும் பத்திரிகைகள் முன்பக்கச் செய்தியாக வெளியிட்டிருந்தன.

அதேவேளை பேயை ஏற்கனவே பார்த்தவர்களும் “இந்தப் பேயைத்தான் நாங்களும் கண்டோம்” என உறுதி செய்தார்கள்.

தற்போது யாழ்ப்பாணத்தில் பேயைக் கண்டவர்கள் பேயைப் பற்றிக் கதைக்கிறார்கள். ஆனால் பேயைப் பற்றி எதுவித முறைப்பாடும் பொலிஸாருக்குக் கிடைக்கவில்லை. அதனால் அவர்களும் அது பற்றி ஆராய முயற்சி செய்யவில்லை.

அதற்குக் காரணம் இந்தப் பேய் யாருக்கும் எவ்வித தீங்கும் செய்யவில்லை. வேண்டுமேன்றே யாரையும் பயமுறுத்தவும் இல்லை. அதைத் தவிர பேயை தேடுவதை விட யாழ்ப்பாணத்திலுள்ள ஆயுதங்களைப் பொலிஸார் தேட வேண்டியுள்ளது.

யாழ்ப்பாண சுகாதார அதிகாரிகளின் கருத்துப்படி உலகில் பேயென்று ஒன்றுமில்லை. இவ்வாறு நடிப்பது மாறு வேடமணிந்த மனிதன் என்றால் வெகுவிரைவில் யாழ்ப்பாண மக்களிடம் அகப்பட்டு, வயிறு புடைக்க சாப்பிட்டு ஏதோவொரு சந்தியில் கிடப்பதைக் காணலாம்.

இந்தப் பேய்க் கதையின் பின்னணியில் உள்ள நாடகம் என்னவென்று வெளிவரும் வரை மக்களின் பயம் போகாது.அவர்கள் வழமை போல் இரவில் பயணங்கள் செல்ல மாட்டார்கள். யாழ்ப்பாணப் பேயின் விபரங்கள் வெளிவரும் வரை பொறுமையுடன் காத்திருப்போம்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு