தந்தைக்கு கல்லீரலை தானமாக வழங்கிய 17 வயது மகள்

ஆசிரியர் - Editor II
தந்தைக்கு கல்லீரலை தானமாக வழங்கிய 17 வயது மகள்

இந்தியாவின் கேரளத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது கல்லீரலின் ஒரு பகுதியை தந்தைக்கு தானம் செய்து, நாட்டிலேயே மிக இளம் வயதில் உடல் உறுப்பு தானம் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

குறித்த மாநிலம் திருச்சூரில் ஹோட்டல் நடத்தி வரும் பிரதீஷ் (வயது 48) என்பவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவாவில் உள்ள ராஜகிரி வைத்தியசாலையில் அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.  

தந்தைக்கு தகுந்த நன்கொடையாளர் கிடைக்காததால், தந்தையின் உடல்நிலை, குடும்பத்தின் வறுமை, மருத்துவச் செலவு போன்றவற்றால் பரிதவித்த மகள் தேவானந்தா (வயது 17), தனது கல்லீரலின் ஒரு பகுதியை வழங்க தானம் செய்ய முடிவு செய்தார்.

இந்நிலையில், இந்திய உடல் உறுப்பு தான சட்டத்தின்படி, 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே, உடல் உறுப்பு தானம் செய்ய முடியும் என்பதால், அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து தனது தந்தைக்கு உறுப்பு தானம் செய்ய விதிவிலக்குக் கோரி, கேரள உயர்மன்றத்தில் தேவானந்தா மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், பிரதீஷ் உடல்நிலையைக் கவனத்தில் கொண்டு, உடல் உறுப்பு தானம் செய்ய தேவானந்தாவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து தேவானந்தாவுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதில் அவருக்கு கல்லீரலில் கொழுப்பு படிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தனது தந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று துடித்த மகள், தனது உணவுப்பழக்கத்தை முற்றிலுமாக மாற்றினார்.

நாள்தோறும் மிகக் கடுமையான உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார். இதன் பலனாக ஒரு மாதத்துக்குள் அவரது கல்லீரலில் படிந்திருந்த கொழுப்பு முற்றிலுமாக கரைந்தது. அவரது கல்லீரல் தானம் செய்வதற்கான சிறந்த நிலைக்கு தயாரானது.

இதைனைத் தொடர்ந்து கடந்த 9 ஆம் திகதி பிரதீஷ்க்கு கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தந்தையும் மகளும் உடல்நலம் அடைந்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு