சட்டவிரோதமான கடலட்டை பண்ணைகளை காட்டுங்கள் நாங்களே அகற்றிவிடுகிறோம்!

ஆசிரியர் - Editor I
சட்டவிரோதமான கடலட்டை பண்ணைகளை காட்டுங்கள் நாங்களே அகற்றிவிடுகிறோம்!

கடலட்டைப் பண்ணைகள் சரியான முறையில் உரிய நியதிகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள குருநகர் கடலட்டைப் பண்ணையாளர்கள் சட்டவிரோத பண்ணை இருந்தால் காட்டுங்கள் அதனை அகற்றுவதற்கு தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்தனர்.

இன்று செவ்வாய் கிழமை குருநகர் கடற்கரையில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர்கள் கூறுகையில்,

கடற்றொழிலாளர்களின் பொருளாதார மீட்சியை குழப்பும் வகையில் கடலட்டைப் பண்ணை தொடர்பாக வெளியாகி வருகின்ற கருத்துக்கள் எமக்கு வேதனை தருகிறது. கடலட்டைப் பண்ணைகள் அனைத்து நடைமுறையகளையும் பின்பற்றியே அமைக்கப்பட்டு வருகின்றது. 

எனினும் சில கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திர ஆவணங்கள் இதுவரை கிடைக்கவில்லை. அதற்காக அவற்றை சட்டவிரோத பண்ணைகளாக கருத முடியாது. கடலட்ட பண்ணை சட்டவிரோதமானது என பேசுகிறார்கள் அதைப் பற்றி எமக்குத் தெரியாது அதைப் பற்றி நாம் பேசப்போவதும் இல்லை. 

நம து பகுதிகளில் அட்டை வளர்ப்புக்காக விண்ணப்பித்து உரிய அனுமதிகளைப் பெற்று கடலட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறோம். சிலர் கடல் மாசடையும், மீன்வளம் பெருகாது என ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்றனர்.

கடலட்டை வளர்ப்பில் ஈடுபடும் கடப்பகுதியானது சுமார் ஒரு அடி கடல் நீர் உள்ள சூடான பகுதியிலே அட்டை வளர்ப்பு இடம்பெறுகிறது. சூடான நீரில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதோ அல்லது முட்டையிடுவது மிகவும் சாத்தியம் குறைவு.

இதைப் பற்றி பேசுபவர்களுக்கு அனைத்து விடயங்களும் தெரிந்தும் மக்களை குழப்பும் வகையில் முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். கடலட்டை பண்ணையை அமைப்பதற்கு தேவையான ஆவண ரீதியான அனுமதியைப் பெறவதற்கான காலதாமதத்தினை தவிர்க்கும் வகையில், 

தளுவல் அடிப்படையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், குறித்த தளுவல் அனுமதிகள் அமைச்சரினால் தான்தோன்றித்தனமாக வழங்கப்படுவதில்லை. 

கடற்றொழில் சங்கங்கள், நீரியல் திணைக்களம், நாரா, நக்டா, சம்மந்தப்பட்ட பிரதேச செயலகம் உட்பட்ட சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் பரீட்சித்து, குறித்த இடத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைக்கப்படுகிறது. 

நீர் வாழ் உயிரினங்களுக்கோ அல்லது சூழலுக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்திய பின்னர், சம்மந்தப்பட்ட பிரதேசத்தினை சேர்ந்த கட்றறொழில் சங்கங்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்திய பின்னரே, பண்ணைகள் அமைப்பதற்கு அனுமதிகள் அளிக்கப்படுகின்றன. 

அதேவேளை சிலர் எந்த திணைக்களங்களிடமும் அனுமதி பெறாமல்  தான்தோன்றித்தனமாக சில பண்ணைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளதாக நாங்களும் அறிகின்றோம். அவை அகற்றப்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. 

இதனை கடற்றொழில் அமைச்சரும் வலியுறுத்தி இருப்பதை செய்திகளில் அவதானித்திருக்கின்றோம். குருநகர் மற்றும் அல்லைப்பிட்டிப் பகுதிகளில் காணப்படும் கடலட்டை பண்ணைகள் கடல் தொழில் சங்கத்தின் அனுமதி, நீரியல்வள திணைக்களம் மற்றும் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபை ஆகியவற்றின் அனுமதி பெற்றுச் செயல்படுத்தப்படுகிறது.

ஆகவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை அளிக்கும் முகமாக ஒரு சிலர் செயல்படுவது கவலை அளிக்கின்ற நிலையில் சட்ட விரோத பண்ணைகள் இருக்கிறது எனக் கூறுபவர்கள் அதனை இனங்காட்டுங்கள் அகற்றுகிறோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு