போராட்டகாரர்களின் பாதுகாப்பை எதிர்க்கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும்!

ஆசிரியர் - Admin
போராட்டகாரர்களின் பாதுகாப்பை எதிர்க்கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும்!

அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே 8 வருடங்களாக பல்கலைக்கழக பட்டப்படிப்பை பூர்த்தி செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உயர் பதவியை வகித்துக் கொண்டு குறிப்பிட்டமை உயர்பதவிக்கு அழகல்ல. காலி முகத்திடல் போராட்ட களத்தில் தாக்குதல் நடத்தப்பட்டமை முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக போராட்டத்தில் ஈடுப்படுபவர்களின் பாதுகாப்பை எதிர்க்கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றின் மீதான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்ட கருத்து முற்றிலும் தவறானது.

அவர் 8 வருடகாலமாக பல்கலைக்கழக பட்டப்படிப்பை பூர்த்தி செய்யவில்லை என ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவி வகித்துக் கொண்டு குறிப்பிடுவது உயர்ந்த பதவிக்கு அழகல்ல.

நாட்டு மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்யவில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜக்ஷவுக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிரான செயற்பாடுகள் மாத்திரம் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உயர் பதவி வகித்துக் கொண்டு ஒரு இளைஞனை நகைப்புக்குள்ளாக்கியதை அவமானமாக கருத வேண்டும்.

தனிப்பட்ட அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றும் உரிமை அனைவருக்கும் உண்டு. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று வசந்த முதலிகே உள்ளிட்டோர் பயங்கரவாத தடைச்சட்டத்தினால் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கொடுமையை தமிழ்கள் நன்கு அறிவார்கள். இதன் காரணமாகவே பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கிறோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

காலி முகத்திடலில் தோற்றம் பெற்ற போராட்டம் வன்முறையற்றது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மே மாதம் பிரதமராக பதவியேற்ற போது காலி முகத்திடல் போராட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

அப்போராட்டம் பயங்கரவாதம் என அவர் அப்போது குறிப்பிடவில்லை. மே மாதம் 09 ஆம் திகதி போராட்டக்களத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தற்போது மறைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த சபையில் உள்ள ஆளும் தரப்பினரால் நாட்டு மக்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, நெருக்கடிக்குள்ளான மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள். ஜனநாயக போராட்டத்தை எவ்வாறு பயங்கரவாத போராட்டம் என்று குறிப்பிடுவது.ஆகவே போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் பாதுகாப்பை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு