பேரறிவாளன் விடுதலை வழக்கு!! -உச்ச நீதிமன்றம் திகதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு-

ஆசிரியர் - Editor II
பேரறிவாளன் விடுதலை வழக்கு!! -உச்ச நீதிமன்றம் திகதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு-

பேரறிவாளன் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள் அடுத்த வழக்கு விசாரணைக்கான திகதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் கடந்த 30 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவித்துவருகின்றனர்.

இந்நிலையில் பேரறிவாளன், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 

அதன் படி இன்று இந்த வழக்கு விசாரணை ஆரம்பமானது. இன்றைய தினம் நீதிபதிகள் மத்திய அரசிடம் அடுக்கடுக்கான  கேள்விகளை  முன்வைத்தனர். ஆளுநருக்கு மத்திய அரசு சார்பில் வாதிடுவது ஏன் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

கிரிமினல் வழக்குகளில் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லையா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆளுநர்  முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

அமைச்சரவை முடிவை ஜனாதிபதிக்கு  அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் உள்ளதா. பேரறிவாளன் விவகாரம்: இந்திய தண்டனை பிரிவு 302 மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் இருக்கிறதா?  என்றும் நீதிபதிகள் கேள்வி சரமாரியாக கேள்வி எழுப்பினர். 

நாங்கள் முடிவு எடுக்கப்போவதாக கூறிய பின்னர் ஜனாதிபதிக்கு  அனுப்பியுள்ளதாக கூறுகிறீர்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அனைத்து அதிகாரமும் ஜனாதிபதிக்குதான்  என்றால், 75 ஆண்டுகளாக கவர்னர்கள் அளித்த மன்னிப்பு அனைத்தும் முரணானதா?

ஆளுநருக்கு மாநில அரசு வாதிட வேண்டுமே தவிர, மத்திய  அரசு வாதிடக் கூடாது. பேரறிவாளன் வழக்கில் தமிழக ஆளுநருக்கு மத்திய அரசு வாதிடுவது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். 

மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் வரும் விசாரணை அமைப்புகளின் வழக்குகளில் மட்டும் மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி மத்திய மற்றும் மாநில அரசு இரண்டிற்கும் இதில் அதிகாரம் உண்டு. 

அரசமைப்பின்படியும் உச்ச நீதிமன்றில் முந்தைய தீர்ப்புகளை சுட்டிக்காட்டியும் மத்திய அரசுதரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரிக்கும் வழக்குகளில் விடுதலை செய்வது மத்தி ய அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது. ஆளுநர் தரப்பிலும் வாதம் முன்வைக்கப்பட்டது. 

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு கூறிய பின்னரே குழப்பம் தொடங்கியதாக தமிழக அரசு சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இந்திய தண்டனை சட்டம் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டது இல்லை. அவற்றில் சில மாற்றங்களை மட்டுமே நாடாளுமன்றம் மேற்கொண்டுள்ளது

சில திருத்தங்களை மேற்கொண்டதாலேயே, மாநிலங்கள் மீது மத்திய அரசு அதிகாரம் செலுத்த முடியாது என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தங்களுக்குள் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர்  திகதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு