மணமகன் கன்னத்தில் அறைந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!! -இளைஞர் ஒருவர் திடீர் மாப்பிள்ளையானார்-

ஆசிரியர் - Editor II
மணமகன் கன்னத்தில் அறைந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!! -இளைஞர் ஒருவர் திடீர் மாப்பிள்ளையானார்-

திருமண வரவேற்பு விழாவில் மணமகன் கன்னத்தில் அறைந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதையடுத்து உறவுக்கார இளைஞர் ஒருவர் திடீர் மாப்பிள்ளையாக தெரிவு செய்யப்பட்டு, அப் பெண்ணை திருமணம் செய்துள்ளார். 

சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இளைஞருக்கும், பண்ருட்டியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய இருவீட்டாரும் முடிவு செய்தனர்.

அதன்படி இவர்களது திருமணம் நேற்று காலை காடாம்புலியூரில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இருவீட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் செய்திருந்தனர்.

இதையொட்டி நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு திருமண வரவேற்பு விழா அதே திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் விருந்து உபசாரமும் தடல்புடலாக நடந்து கொண்டிருந்தது.

திருமண வரவேற்பு விழாவில் பாட்டு கச்சேரி நிகழ்ச்சியும் நடந்தது. இதில் மணமக்கள் இருவரும் ஜோடியாக ஒரு பாடலுக்கு நடனம் ஆடினர். அந்த சமயத்தில் மணமகளின் சகோதரர் உறவுமுறை கொண்ட இளைஞர்  ஒருவரும் அங்கு வந்து நடனம் ஆடினார். இது மணமகனுக்கு பிடிக்கவில்லை.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், திடீரென ஆத்திரத்தில் மணமகளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதில் மணமகள் அதிர்ச்சியில் உறைந்துபொனார். இதனால் திருமண மண்டபமே அமைதியானது. 

அனைத்து சொந்தங்கள் முன்னிலையில் மேடையில் தன்னை கன்னத்தில் அறைந்த இவரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று அறிவித்தபடி மணமகள் அழுது கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெண் வீட்டாரிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் போது மணமகன் தான் செய்தது தவறு என்று கூறி மணமகள் தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

இருப்பினும் பெண்வீட்டார் சமாதானம் ஆகவில்லை. திருமணத்திற்கு கொண்டுவந்த சீர்வரிசை பொருட்களை லொரியில் ஏற்றிக்கொண்டு, மணமகளை காரில் பண்ருட்டிக்கு அழைத்து சென்றுவிட்டனர்.

பண்ருட்டிக்கு சென்ற மணமகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இரவோடு இரவாக கூடிப்பேசி செஞ்சி அருகில் உள்ள உறவினர் ஒருவரை மணமகனாக தெரிவு செய்தனர். இதையடுத்து உடனே அவர் பண்ருட்டிக்கு அழைத்து வரப்பட்டார்.

பின்னர் நேற்று காலை திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் வைத்து மணப்பெண்ணுக்கும் திடீர் மாப்பிள்ளைக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு