யாழ்.வலிகாமம் வடக்கில் மக்களின் காணிகளில் தென்னை நடும் இராணுவம்! நம்பிக்கை இழக்கும் மக்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வலிகாமம் வடக்கில் மக்களின் காணிகளில் தென்னை நடும் இராணுவம்! நம்பிக்கை இழக்கும் மக்கள்..

யாழ்.வலி,வடக்கில் மக்களுக்கு சொந்தமான காணிகளை ஆக்கிரமித்திருக்கும் படையினர் தென்னைகளை நட்டு நிரந்தரமாக காணிகளை சுவிகரிக்கும் முயற்சி இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக வலி,வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கம் சுட்டிக்காட்டியிருக்கின்றது. 

இது குறித்து சங்கம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, யாழ்.வலி,வடக்கிலிருந்து வெளியேறி 31 வருடங்களாக மக்கள் தமது சொந்த இடங்களில் மீள குடியேற முடியாத நிலையில் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 

மயிலிட்டி, பலாலி, வசாவிளான், குரும்பசிட்டி, கட்டுவன் பகுதிகளில் நில விடுவிப்பு செய்யப்படாது 3500 ஏக்கர் தொடர்ந்தும் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் மக்கள் தமது காணிகளை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். மேலும் மயிலிட்டி, பலாலி பகுதிகளில்

முழுமையான மீள்குடியேற்றம் இடம்பெறாத நிலையில் மயிலிட்டி மீனவர்கள் தொழில் பாதிப்பை சந்தித்துள்ளதுடன், சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலம் கட்டுப்பாட்டில் உள்ளதால் விவசாயிகளும் தொழில் பாதிப்பை சந்தித்துள்ளார்கள். இது இவ்வாறிருக்கையில், 

பருத்தித்துறை - பொன்னாலை வீதியில் மக்களின் உறுதி காணிகளில் வளர்ந்துள்ள தென்னைகளை தறிக்கும் படையினர் புதிதாக அங்கே அதிகளவு தென்னைகளை நடுவதற்கு குழிகளை வெட்டிக் கொண்டிருக்கின்றனர். இதனால் அந்த நிலம் மக்களுக்கு மீள வழங்கப்படுமா என்ற பாரிய சந்தேகம் எழுந்துள்ளது. 

மேலும் மக்களின் வீடுகள், பாடசாலை, தேவாலயங்கள், ஆலயங்கள், கன்னியாஸ்த்திரி மடங்கள் அழிக்கப்பட்டுள்ளது. மயிலிட்டி மக்கள் குடியேற்றப்படாமல் துறைமுகத்தை பெரும் செலவில் புனரமைத்தும் மயிலிட்டி மக்களுக்கு அதனால் பயன் எதுவுமில்லை. 

இவ்வாறான நிலையில் சுற்றிவர இராணுவம் நிலைகொண்டிருக்கின்றது. மேலும் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் வலி,வடக்கில் ஒரு அங்குல நிலம்கூட இதுவரையில் விடுவிக்கப்பட்டிருக்கவில்லை. அதேபோல் காணிகளை விடுவியுங்கள் என முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கும் பதிலில்லை. 

இந்நிலையில் 31 வருடகால மீள்குடியேற்ற ஏக்கத்தை தீர்ப்பதற்கும், சகல தரப்பும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கேட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு