நாட்டை ஆட்சி செய்வது யார்? - ரணிலுக்கு வந்த குழப்பம்.

ஆசிரியர் - Admin
நாட்டை ஆட்சி செய்வது யார்? - ரணிலுக்கு வந்த குழப்பம்.

அரிசி ஆலை உரிமையாளர்களின் அறிவிப்பால், நாட்டை ஆட்சி செய்வது அமைச்சரவையா அல்லது அரிசி ஆலை உரிமையாளர்களா என்ற கேள்வி மக்களுக்கு எழுந்திருக்கின்றது. இது தொடர்பில் அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளை தொடர்ந்து ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டை யார் ஆட்சி செய்கின்றனர் என்பதை அரசாங்கத்திடம் கேட்கின்றேன் ஏனெனில், அரிசி ஆலை உரிமையாளர்கள் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி அரிசி விலை தொடர்பாக நாட்டுக்கு அறிவித்திருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் இதுதொடர்பில் அரசாங்கம் எதனையும் தெரிவிக்காமல் இருக்கின்றது. மக்களும் அரசாங்கத்தின் பதிலொன்றை எதிர்பார்க்கின்றனர். நாட்டை நிர்வகிப்பது யார் என்ற கேள்வியை மக்களும் கேட்கின்றனர்.

நாட்டை ஆட்சி செய்வது அமைச்சரவையா அல்லது அரிசி ஆலை உரிமையாளர்களா என்ற கேள்வி அனைவருக்கும் எழுகின்றது. அதனால் அரசாங்கம் இதுதொடர்பாக நாட்டுக்கு அறிவிக்கவேண்டும் என்றார்.

இதன்போது எழுந்த சபைமுதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன, முன்னாள் பிரதமர் சபை சம்பிரதாயத்துக்கு மாற்றமாகவே கேள்வி கேட்கின்றார். அவ்வாறான கேள்விக்கு இடமளிக்க முடியாது. வேறு ஒரு தினத்தில் அதனை கேட்கலாம் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு