வியாழேந்திரனின் மெய்பாதுகாவலர் தொடர்ந்து விளக்கமறியலில்

ஆசிரியர் - Admin

மட்டக்களப்பில் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடாத்திய சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட அமைச்சரின் மெய்பாதுகாவலரை எதிர்வரும் 9 ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் காணொளி மூலம் நேற்று (26) உத்தரவிட்டார்.

கடந்த மாதம் 21 ம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவர் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடாத்தியதில் 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மெய்பாதுகாவலர் விளக்கமறியலில் இருந்துவரும் நிலையில் நேற்று (26) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது கொரோனா தொற்று காரணமாக குறித்த நபர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரமுடியாத நிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.

இதன்போது கடந்த வழக்கின் தவணையின் போது உயிரிழந்தவரின் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் குறித்த வழக்கை மட்டக்களப்பு காவல் துறை விசாரணை செய்வது பொருத்தமற்றது என நீதிமன்றிற்கு தெரிவித்ததையடுத்து குறித்த வழக்கை மட்டக்களப்பு காவல் துறையிடம் இருந்து வேறு பிரிவுக்கு வழங்குமாறு சிரேஷ்ட பிரதி காவல் துறை  மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் மட்டக்களப்பு காவல் துறையிடம் இருந்து மீளப்பெற்றிருந்த நிலையில் மாவட்ட குற்ற விசாரணை பிரிவு காவல் துறை  அந்த வழக்கை விசாரணை செய்ய முற்பட்டபோது குறித்த வழக்கு தொடர்பாக வேறு பிரிவுக்கு வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த வழக்கு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு விசாரணை செய்ய பொருத்தமற்றது என நீதிமன்றம் காவல் துறைக்கு அறிவுரை வழங்கி குறித்த மெய்பாதுகாவலரை எதிர்வரும் 9ம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி மூலம் நீதவான் உத்தரவிட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு