பூகோள அரசியல் நோக்கமாயின் நிச்சயமாக எதிர்ப்போம்!

ஆசிரியர் - Admin
பூகோள அரசியல் நோக்கமாயின் நிச்சயமாக எதிர்ப்போம்!

வடக்கில் இடம்பெறும் கடல் அட்டை விவகாரத்தில் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத நோக்கத்துடன் பூகோள அரசியல் நோக்கங்களோடு எடுக்கின்ற அரசியல் நடவடிக்கையாக நாங்கள் கருதினால் நிச்சயமாக எதிர்ப்போம் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பகுதியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள் சிலருக்கான உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் கைவேலி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கலந்து கொண்டிருந்தார் இந்த நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“கொரோனா அனர்த்ததினால் தமிழ் மக்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் கடந்த ஒரு கிழமையாக வடக்கில் கிளிநொச்சி,யாழ்ப்பாணத்தில் கடல் அட்டை உற்பத்தி என்ற பெயரில் நடைபெறுகின்ற சீன நாட்டின் நபர்கள் இங்கு நிறுவனத்தினை உருவாக்கி நடத்துகின்ற வேலைகள் தொடர்பில் தமிழ்மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வந்துள்ளது.

பொருளாதாரம் முழுமையாக சுருங்கிபோயுள்ள நிலையில் போரால் 32 ஆண்டுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொரோனா அடிக்குமேல் அடியாக தலையில் சுமத்தப்பட்ட ஒரு மிகப்பெரிய கொடூரமான சுமையாக உள்ள இடத்தில் தங்களுக்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு சந்தர்பத்தினையும் தேடிக்கொண்டிருக்கின்ற நிலைதான் இன்றும் தொடர்கின்றது.

இந்த பின்னணியில் தான் தங்களுக்கு எந்த விதமான வருமானமும் தொழிலும் இல்லாத இடத்தில் மக்களின் கடல் வளத்தில் தொழில் செய்து மக்களுக்கான வருமானத்தினை பறிக்கும் நடவடிக்கையினை கடுமையாக எதிர்த்து தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கும் மக்கள் தெரிவித்து இதன் உண்மைத்தன்மையினை வெளிப்படுத்த சொல்லி கேட்டுள்ளார்கள்.

அரியாலை கடற்பரப்பிற்கு சென்ற வேளை அங்கு ஒரு சீன நிறுவனம் நான்கு சீன பிரஜைகளின் முழு பங்களிப்புடன் ஒரு கடல் அட்டைக்கான உற்பத்தி நிறுவனம் ஒன்றினை உருவாக்கி குஞ்சுகளை பொரிக்கவைத்து நடவடிக்கை எடுப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் முகாமையாளராக இருப்பது ஈ.பி.டி.பி என்ற ஆயுத துணைக்குழுவின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கணேஸ் என்பவர் தான் இருக்கின்றார்கள். இது ஆறு ஆண்டுகளாக இயங்கிக்கொண்டிருந்தும் எந்தவிதமான வருமானத்தினையும் அங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு வழங்கியதில்லை அந்த நிறுவனம் என்ன செய்கிறது என்ற கேள்வி எங்களுக்கு எழுகின்றது.

இந்த விடயத்தினை நாங்கள் அவர்களிடம் கேட்டபோது, அவர்கள் தெரிவித்தது அந்த கடல் அட்டை குஞ்சுகளை தாங்கள் பிரித்து கொடுப்பதில் தான் வேலை வாய்ப்பு என்பது மறைமுகமாக 2,500 குடும்பங்களுக்கு தாங்கள் செய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளார்கள் இது எங்களுக்கு அதிசயமாக இருந்தது.

உண்மைத் தன்மையினை நாங்கள் தேடவுள்ளோம் உண்மையில் வேலைவாய்ப்பிற்குரிய விடையமாக இருந்தால் பூகோள அரசியல் கோணங்கள் இல்லாமல் இருந்தால் நாங்கள் எதிர்க்கமாட்டோம் அப்படி இல்லாமல் இது வெறும் முகக்கவசமாக இருந்து அதற்கு பின்னால் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத நோக்கத்துடன் பூகோள அரசியல் நோக்கங்களோடு எடுக்கின்ற அரசியல் நடவடிக்கையாக நாங்கள் கருதினால் நிச்சயமாக எதிர்ப்போம்.

அரசாங்கம் கொவிட் தடுப்பிற்காக அதிகளவில் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள் இவ்வளவு பெரியதொகையில் 5 வீதம் கூட செலவு செய்திருக்கமாட்டார்கள். வடக்கு கிழக்கில் தடுப்பூசி நடவடிக்கை மிகவும் தாமதம் அடைந்த நிலையில் தான் இருக்கின்றது.

போரால் அழிக்கப்பட்ட மக்கள் இன்று கொரோனாவால் இன்னொரு அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு இன்னொரு அழிப்பிற்கு அரசு தள்ளுகின்றார்கள் என்ற சந்தேகத்தில் உள்ளோம்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை அரசிற்கு நிதி உதவிகளை வழங்குகின்றவர்கள் வழங்குகின்ற நிதி சிங்களம் இல்லாத மக்களுக்கு சென்றடைகின்றதாக என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு