எப்படி உள்ளது யாழ்ப்பாணத்து நிலைமை?

ஆசிரியர் - Admin
எப்படி உள்ளது யாழ்ப்பாணத்து நிலைமை?

யாழ்ப்பாணத்தில் 7251 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவு பொதி தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்தார்

யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணி தொற்றாளர்களுடன் நடமாடியதன் அடிப்படையில் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய வீடுகளில் சுயதனிமைப் படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் இடைக்கால நிவாரண உதவியாக அந்த 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவு பொதியை மாவட்ட செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கி வருகின்றோம்

அதன் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் இதுவரை சுமார் 7251 குடும்பங்களுக்கு அரசினால் வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபா பெறுமதி கொண்ட உணவு பொதி தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது

இந்த குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் காலத்தில் எமக்கு உரிய விபரங்கள் கிடைக்கப்பெற்றவுடன் அவர்களுக்கு அதுகிடைக்கும் அதாவது விபரங்கள் கிடைக்கப்பெறுவதன் அடிப்படையிலேயே உதவிப் பொருட்களை வழங்க முடியும்

இந்த விடயம் தொடர்பில் சகல பிரதேச செயலர்களுக்கும் உரியவரான அறிவுறுத்தல்கள் எம்மால் வழங்கப்பட்டுள்ளன எனவே தனி தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கான உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இறுதியாக கிடைத்த பிசிஆர் பரிசோதனை முடிவின் படி 52 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

கடந்த ஐந்து , ஆறு நாட்களாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50க்கு மேற்பட்ட தாக காணப்படுகின்றது அதே நேரத்தில் மொத்தமாக 2277 நபர்களுக்கு அக்டோபர் மாதத்திற்குப் பின்னர் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலைமை காணப்படுகின்றது

மேலும் ஒரு கொரோனா மரணம் யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. எனவே யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையிலே பலாலி வடக்கு கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்பட்டதன் அடிப்படையில் அந்தோணி புரம் கிராமத்தினை தனிமைப்படுத்தலுக்குட்படுத்தி இருக்கின்றோம் அதில் 199 குடும்பங்கள் தனிமைப்படுத்த பட்டுள்ளார்கள்

தற்போதைய நிலையில் 2 ஆயிரத்து 123 குடும்பங்களைச் சேர்ந்த 5249பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் இடர் கால நிவாரண உதவியாக 10 ஆயிரம் ரூபா உணவு பொதி தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.

பயண தடையானது பொதுமக்களுடைய பாதுகாப்பினை உறுதி படுத்துவதற்காக தான் அரசாங்கத்தினால் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. எனவே பொதுமக்கள் இந்த பயணதடையினை அனுசரித்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.

பொதுமக்கள் தமது நடமாட்டத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். யாழ்ப்பாண மாவட்டத்தில் சகல ஒன்றுகூடல் நிகழ்வுகள், களியாட்ட நிகழ்வுகள் யாவும் தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒன்றுகூடும் செயற்பாட்டில் ஈடுபடக்கூடாது.

தற்போது யாழில் மதகுருமார் சிலருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலை காணப்படுகின்றது. எனவே பொதுமக்கள் வழிபாட்டுத் தலங்களில் ஒன்று கூடுவதை நிறுத்த வேண்டும். பொது இடங்கள், அலுவலகங்கள் மற்றும் வெளியிடங்களுக்கு செல்லும் போது, பொதுமக்கள் கட்டாயமாக முக கவசத்தினை சரியான முறையில் அணிந்து செல்ல வேண்டும்.

நாட்டில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தேசிய ரீதியில், முன்னுரிமை அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. எனவே யாழ்ப்பாண மாவட்டத்தில் சுகாதார பிரிவினருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி வழங்கியிருக்கின்றோம்.

எங்களுடைய கோரிக்கையின் அடிப்படையில் உள்நாட்டலுவல்கள் அமைச்சு எமது மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கப்படவேண்டியோர் எண்ணிக்கை பற்றி கோரி இருக்கின்றார்கள். அதனை நாங்கள் அனுப்பியிருக்கிறோம். 

அதன் அடிப்படையிலே யாழ்ப்பாண மாவட்டத்தில் சகல பிரதேச செயலகங்கள் மாவட்ட செயலகம் உட்பட சகல திணைக்கள உத்தியோகத்தர்களுமாக 3 ஆயிரத்து நூறுக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என விண்ணப்பித்து இருக்கின்றோம். மிக விரைவில் அக் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

அத்தோடு யாழ் மாவட்டத்தில் இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களாக மேலதிகமான இரண்டு இடங்களை நாங்கள் புதிதாக ஆரம்பித்துள்ளோம். நாவற்குழியில் 450 பேருக்கு மேற்பட்டோர் தங்க வைப்பதற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் அந்த அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றோம். அந்த வேலைகள் முடிவடைந்தவுடன் இடைத்தங்கல் சிகிச்சை நிலையம் செயற்படத் தொடங்கும்.

இதைவிட 4 ஆதார வைத்திய சாலைகளிலும் ஒவ்வொரு விடுதிகள் நோயாளர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்தோடு எமக்கு ஆளணி பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக காணப்படுகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை முன்னரை விட தற்போது பிசிஆர் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என மேலும் அவர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு