யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரம்..! இன்றும் 58 பேருக்கு தொற்று, வடக்கில் 74 பேருக்கு தொற்று, பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரம்..! இன்றும் 58 பேருக்கு தொற்று, வடக்கில் 74 பேருக்கு தொற்று, பணிப்பாளர் தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 58 பேர் உட்பட வடக்கில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இதன்படி யாழ்.மாவட்டத்தில் 58 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 2 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 2 பேருக்குமாக 74 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேருக்கு தொற்று.

புதுக்குடியிருப்பு சுகாதார உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கும், மாங்குளம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பேருக்கு தொற்று.

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 பேருக்கும், தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும், கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

குறித்த 4 பேரும் வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களாவர். 

வவுனியா மாவட்டத்தில் 2 பேருக்கு தொற்று.

வவுனியா மாவட்ட வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. குறித்த இருவரும் சுகாதார உத்தியோகத்தர்கள்.

மன்னார் மாவட்டத்தில் 2 பேருக்கு தொற்று.

மன்னார் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

யாழ்.மாவட்டத்தில் 58 பேருக்கு தொற்று.

யாழ்.மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்ட 18 பேருக்கும், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 39 பேருக்கும், யாழ்.சிறைச்சாலையில் ஒருவருக்குமாக 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 6 பேருக்கும்,  பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கும், சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 5 பேருக்கும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உறுதியானது.

மேலும் யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒரு குழந்தையும் அடங்குகின்றார். இந்தியாவிலிருந்து தப்பித்து யாழ்ப்பாணம் வந்த நால்வர் 

குருநகரில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு குழந்தைக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கரவெட்டி பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 11 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

அவர்கள் அனைவரும் நெல்லியடி வெதுப்பகத்தின் ஊழியர்கள்.தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 21 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தையிட்டி கிராமத்தில் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டவர்கள். 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் திருமண நிகழ்வுக்கு தடை என அறிவிக்கப்பட்ட பின் இரகசியமாக இந்த திருமண நிகழ்வை நடத்தியுள்ளனர் என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு