நாடு முழுவதும் விசேட கண்காணிப்பு நடவடிக்கை..! நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்திருக்கும் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் விசேட கண்காணிப்பு நடவடிக்கை..! நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்திருக்கும் எச்சரிக்கை..

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி நடைபெறும் விருந்துபசாரங்கள், நிகழ்வுகள் குறித்து விசேட கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார். 

விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு முரணான மதுபான விருந்துபசாரங்கள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமைய பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் நேற்றிரவு முதல் கண்காணிப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கண்காணிப்பின் போது விருந்துபசாரங்கள் இடம்பெறும் இடங்கள் சுற்றிவளைக்கப்பட்டால் விருந்துபசாரத்தில் கலந்துக் கொண்டவர்கள் , ஏற்பாடு செய்தவர்கள் , விருந்துபசாரத்திற்கான இடவசிகளை செய்துக் கொடுத்தவர்கள் மற்றும் மதுபானத்தை விநியோகித்தவர்கள் என 

அனைவருக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.இதேவேளை நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறியமை தொடர்பில் நேற்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதற்கமைய கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 4,857 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.மேல்மாகாணத்தில் கடற்கரை மற்றும் ஆற்றங்கரை பகுதிகளில் குளிப்பவர்கள் தொடர்பிலும் , அந்த பகுதிகளில் காணப்படும் உணவு விற்பனை நிலையங்கள் தொடர்பிலும் 

நேற்று ஞாயிற்றுக்கிழமை விசேட கண்காணிப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 1,093 இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதோடு , 6,328 நபர்கள் கண்காணிக்கப்பட்டனர். அவர்களுள் 38 பேர் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்போது பாதுகாப்பற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , 4,306 பேருக்கு சுற்றாடல் சட்டவிதிகள் தொடர்பில் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருந்தது. கொவிட்-19 வைரஸ் பரவல் தீவிரமாக பரவலடைந்து வருகின்ற நிலையில் 

அதனை தடுக்கும் நோக்கத்திலே பொலிஸார் இது போன்ற சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்கள். இதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு