மட்டக்களப்பில் சொந்தக் காணியை இலவசமாக பகிர்ந்தளித்த சமூக ஆர்வலர்

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிரான் பகுதியில் உள்ள சமூக ஆர்வலரான குருசுமுத்து லவக்குமார் தனக்குச் சொந்தமான 12 , 1/2 ஏக்கர் காணியினையே காணியற்ற வறிய குடும்பங்களுக்கு இவ்வாறு இலவசமாக பகிர்ந்தளித்துள்ளார்.
மாவட்டம் பூராகவுமுள்ள கிராமங்கள் தோறும் காணியற்ற குடும்பங்களை இனங்கண்டு ஒரு குடும்பத்திற்கு தலா பத்து பேர்ச் வீதம் 224 பேருக்கு காணிகளை பகிர்ந்தளிக்கவுள்ளார்.
இதன் முதற்கட்டமாக 46 குடும்பங்களுக்கான காணிகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு (15) பிற்பகல் 4.00 மணியளவில் கிரானில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் வறுமை நிலையில் வாடகை வீட்டில் வசிப்போர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கணவனை இழந்தோர் என அடையாளம் காணப்பட்டவர்களின் எதிர்கால நலன்கருதி இக் காணிகள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
பயணாளிகளின் பிள்ளைகளின் கல்வி மேம்பாடு, பொருளாதாரம் விருத்தி போன்ற விடயங்களை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக நன்கொடையாளர் வி.லவக்குமார் தெரிவித்தார்.
இதில் பொது தேவைகளான மத ஸ்தலங்கள், பாடசாலை போன்றவற்றிற்காக காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், குடியிருப்பாளர்களின் எதிர்கால தேவை மற்றும் வாழ்வாதாரத்தினை நிவர்த்தி செய்ய சிறுதோட்டப் பயிர் செய்கை நடவடிக்கைக்காக குத்தகை அடிப்படையில் மேலும் 15 ஏக்கர் காணி பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அருட்தந்தை நியூட்டன் அடிகளார், சகல மத ஜயப்பன் யாத்திரை குழு குருசாமி சாம்பசிவம் புனிதாபரன், இளைஞர் அணி தலைவர் அனோஜன் மற்றும் இளைப்பாறிய மரமுந்திரிகை கூட்டுத்தாபன முகாமையாளர் டி.நிதர்சன் ஆகியோர்கள் அதிதிகாளாக கலந்து கொண்டதுடன் காணி வழங்குனருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.