கொலை அச்சுறுத்தல்..! பொலிஸ் முறைப்பாட்டில் திருப்தியில்லை, தமிழ் அரசியல் கைதியின் தாயார் மனித உரிமை ஆணைக்குழுவில்..

ஆசிரியர் - Editor I
கொலை அச்சுறுத்தல்..! பொலிஸ் முறைப்பாட்டில் திருப்தியில்லை, தமிழ் அரசியல் கைதியின் தாயார் மனித உரிமை ஆணைக்குழுவில்..

தம்மை அச்சுறுத்துவதாக கூறி தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயார் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்த நிலையில் குறித்த முறைப்பாட்டினால் திருப்தி இல்லை. என கூறி மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து நேற்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்தார்.

தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாரான கோண்டாவில் கிழக்கில் வசிக்கும் தேவராசா தேவராணி என்பவர் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ந்து போராடி வருகிறார். இவர் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஒழுங்குபடுத்தப்படும் 

அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு தனது கோரிக்கையை பதிவுசெய்து வருகிறார். அந்தவகையில், கடந்த செவ்வாய்க்கிழமை, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கைதிகளுக்காக குரல் கொடுத்தார். 

அன்றைய தினம் இரவு இனந்தெரியாத நபர் ஒருவர் தொலைபேசி மூலம் அவரை தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.பின்னர் தொடர்சியாக வேறு தொலைபேசி இலக்கங்களிலும் இருந்து அச்சுறுத்தும் வகையில் அழைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

இதானால் பயமுற்று, தனியாக வசிக்கும் குறித்த தாய் குரலற்றவர்களின் குரல் அமைப்பிடம் குறித்த விடயத்தை தெரியப்படுத்தினார். அந்தவகையில் குறித்த தாய் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்தார்.

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு திருப்தியளிக்காததால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.இதற்கு முன்னரும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக 

இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்து கொண்டால் இனந்தெரியாதவர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள் என்றும் தனியாக வசிக்கும் தனக்கு பயமாக உள்ளது எனவும் குறித்த தாயார் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு