யாழ்.மாநகரை திங்கள் கிழமை தொடக்கம் முடக்கலில் இருந்து விடுவியுங்கள்..! யாழ்.வணிகர்கழகம் மாவட்ட செயலருக்கு கடிதம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரை திங்கள் கிழமை தொடக்கம் முடக்கலில் இருந்து விடுவியுங்கள்..! யாழ்.வணிகர்கழகம் மாவட்ட செயலருக்கு கடிதம்..

யாழ்.மாநகரில் முடக்கப்பட்டிருக்கும் வர்த்தக நிலையங்களை எதிர்வரும் திங்கள் கிழமை தொடக்கம் திறப்பதற்கு அனுமதிக்குமாறுகோரி அரச அதிபரிடம் யாழ்.வணிகர்கழகம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருக்கின்றது. 

இது குறித்த வணிகர்கழகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

கடந்த வெள்ளிக்கிழமை 23.03.2021 தொடக்கம் நகரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகள் முடக்கப்பட்டதனால் வர்த்தகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த விடயத்தில் சில பாரபட்சமான விடயங்களும் பின்பற்றப்பட்டுள்ளது என்பதை தங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றோம். 

1. வர்த்தகர்களின் செயற்பாடுகள் முற்றுமுழுதாக முடக்கப்பட்ட நிலையில் அதே முடக்கப்பட்ட பகுதிகளில் வங்கிகள் , நிதி நிறுவனங்கள் , காப்புறுதி நிறுவனங்கள், நகை அடகு நிலையங்கள் போன்றவை வழமை போல் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இது எந்த விதத்திலும்; நியாயமாக கருதமுடியாதுள்ளது.

2. கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் சுமார் 1440 நகர வர்த்தகர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அறிகின்றோம். இதில் ஆக 43 பேருக்கு மாத்திரமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரப்பிரிவினரால் தெரிவிக்கப்படுகின்றது. இது விகித அடிப்படையில் 3வீதம் ஆகக் கருதப்படுகின்றது. 

3. நகரத்தின் முக்கிய பகுதி முடக்கப்பட்டு வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதால் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யும் மொத்த வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டுறவுத்துறை மற்றும் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகம் செய்ய முடியாதுள்ளது. 

4. கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா தாக்கம் காரணமாக வர்த்தகத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள தடையானது அவர்களை மேலும் பாரியளவில் பொருளாதார ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

5. நாட்டின் எல்லா பகுதிகளிலும் கொரோனா தாக்கம் இருப்பது தாங்கள் அறிந்ததே. அப்படி இருக்கும் போது யாழ்ப்பாண நகர வர்த்கர்களை வர்த்தகம் செய்யவிடாது தடை விதித்து அவர்களை பாதிப்படையச் செய்திருப்பது கவலையளிக்கிறது.

6. தமிழ் சிங்களப் புத்தாண்டு வர இருக்கும் இவ் வேளையில் தாங்கள் ஏற்படுத்திய தடையானது வர்த்தகர்கள் , உள்ளுர் உணவு உற்பத்தியில் ஈடுபடும் தொழில் முயற்சியாளர்கள் , விவசாய உற்பத்திப் பொருட்களில் ஈடுபடுவோர் என பல துறை சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளை பாரிய பாதிப்புக்களையும் , பாரிய நட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

7. நகரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தகத்துறையை முடக்கிவிட்டு ஏனைய அதிகளவான மக்கள் கூடும் சில நிறுவனங்களுக்கு சகஜமாக செயற்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இது எமது பகுதி வர்த்தகத்துறை பாதிப்படைய வேண்டும் என்ற நோக்கில் பாரபட்சமாக செய்யப்பட்டது என்று வர்த்தகர்கள் கருதுகின்றார்கள். 

8. பூட்டப்பட்டுள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் அங்கே தொழில் புரியும் தொழிலாளர்களுக்கான நிவாரணத்தையும் தொழில் இழப்புக்கான நட்ட ஈட்டையும் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

ஆகவே நாம் மேலே குறிப்பிட்ட விடயங்களை கவனத்தில் எடுத்து எமக்கு நீதி வழங்குவதுடன் வரும் திங்கட்கிழமையிலுருந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கடைகளைத் திறந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்று தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். 

ச. சிவலோகேசன்- செயலாளர் 

ந்த கோரிக்கை கடித பிரதி: ஆளுநர் - வடமாகாணம் 

கடற்றொழில் அமைச்சர் - டக்ளஸ் தேவானந்தா

அங்கஜன் இராமநாதன் - பாராளுமன்ற உறுப்பினர்

எம்.ஏ. சுமந்திரன்பாராளுமன்ற உறுப்பினர்

சி.சிறிதரன் பாராளுமன்ற உறுப்பினர் 

த. சித்தார்த்தன் பாராளுமன்ற உறுப்பினர்

 கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினர் 

 செ. கஜேந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு