46/1 தீர்மானம் இயற்கை நீதிக்கு முரணானது!

ஆசிரியர் - Admin
46/1 தீர்மானம் இயற்கை நீதிக்கு முரணானது!

இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசு தான் செய்த குற்றங்களுக்காக, தன்னைத்தானே விசாரிக்கக் கோரும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46/1 தீர்மானம் இயற்கை நீதிக்கு முரணானது. இது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை ஏமாற்றும் தீர்மானமாகும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

"இந்த அரசால் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட இனப்படுகொலை உட்பட அனைத்துக் குற்றங்களையும் முழுமையாக பக்கச்சார்பற்ற முறையில் விசாரிக்கக்கூடிய ஒரு சர்வதேச பொறிமுறையையே பாதிக்கப்பட்ட மக்களாகிய தமிழர்கள் கேட்டு நின்றார்கள்.

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரையில், இனப்படுகொலை உட்பட பல்வேறு குற்றங்களை இழைத்த, குற்றங்களின் பங்காளியாக உள்ள இந்த அரசையே, தனது குற்றங்களை விசாரிக்கக் கோரும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46/1 தீர்மானம் மிகவும் ஏமாற்றகரமானது. இயற்கை நீதிக்கு முரணானது. உண்மையில் இது இலங்கை அரசைக் காப்பாற்றி இருக்கின்றது.

2015 இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் சர்வதேச வழக்குத் தொடுநர்கள், சர்வதேச நீதிபதிகளை விசாரணையில் இணைத்துக்கொள்வது பற்றி பெயரளவிலேனும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இந்த 2021 இன் 46/1 தீர்மானத்தின் செயற்பாட்டுப் பந்தி 9 இன் பிரகாரம், குற்றத்தின் பங்காளிகளான இந்த அரசையே, தான் இழைத்த குற்றங்களை விசாரிக்கக் கோரும் இயற்கை நீதிக்கு முரணான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட மக்களாகிய தமிழர்களைப் பொறுத்த வரையில் - நீதிக்கான பொறுப்புக்கூறலைப் பொறுத்தவரையில் இந்தத் தீர்மானம் மிகவும் பலவீனமானது வலுவற்றதாகும். குற்றவாளியான இலங்கை அரசை மீண்டும் பாதுகாக்கும் நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, குற்றங்களை இழைத்த இலங்கையே, தனது குற்றங்களை விசாரிக்க வேண்டும் எனக் கோருகின்ற இந்தத் தீர்மானத்தை வரவேற்றமைக்காக சுமந்திரன், 'நாட்டுக்குத் துரோகம் இழைத்துவிட்டார்' என அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிடுகின்றார்கள்.

நான் சுமந்திரனின் ஓர் ஆதரவாளன் அல்லன். ஆனால், சுமந்திரன் உண்மையில் இலங்கையைக் காப்பாற்றியுள்ளார் என்பதே உண்மையாகும்.

அந்தவகையில் அவர், இலங்கை அரசுக்கு அல்ல, மாறாக தன்னை வாக்களித்துத் தெரிவு செய்த, தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கே துரோகம் இழைத்துள்ளார்.

உண்மையில் இந்த ஐ.நா. தீர்மானங்கள் தமிழ் மக்களுக்கு நீதி கோரும் நோக்கில் நிறைவேற்றப்படவில்லை. முற்றிலும் சீனாவை நோக்கி சாய்ந்திருக்கும் இந்த அரசுக்கு, தத்தமது புவிசார் அரசியல் நலன்களைப் காப்பாற்றிக்கொள்ள இந்திய மற்றும் மேற்குலக நாடுகள் கொடுக்கின்ற ஓர் அழுத்தமாகவே இதை நாம் பார்க்கின்றோம்.

அந்த நோக்கத்துக்காக அந்த வல்லரசுகள் தமிழர்களை ஒரு கருவியாக மட்டுமே பாவித்துள்ளார்கள். இந்திய மற்றும் மேற்குலக நாடுகளுக்கும் சீனாவுக்குமான இடையிலான இந்த புவிசார் அரசியல் போட்டியில் சீனாவின் பக்கம் சார்ந்துள்ள இந்த அரசைத் தமது வழிக்குக் கொண்டுவருவதற்காக தமிழர்கள் வெறுமனே பகடைகளாக மட்டுமே பாவிக்கப்படுகின்றார்கள் என்பதே கவலைக்குரிய விடயமாகும்" - என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு