இரணைதீவை "சவக்காலை" ஆக்காதே..! கத்தோலிக்க தேவாலயங்கள் முன்பாக மக்கள் எதிர்ப்பு போராட்டம்..

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் தீர்மானத்தை எதிர்த்து யாழ்.மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் இன்று காலை 6.30 மணிக்கு இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. கத்தோலிக்க மக்கள் வாழும் இரணைதீவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின்
சடங்களை அடக்கம் செய்ய அரசு எடுத்த தீர்மானத்தை கைவிடவேண்டும். எமது எதிர்ப்பு முஸ்லிம் மக்களுக்கானது அல்ல. இஸ்லாமியரும் கத்தோலிக்கர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம்.
மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவேண்டும். என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் வலியுறுத்தினார்.
எம் வாழ்விடத்தை சவக்காலை ஆக்காதே, இரணைதீவு மக்களின் நல்வாழ்வை சிதைக்காதே, மத நல்லிணக்கத்தை சிதைக்காதே, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.
இதேபோன்று அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் வெவ்வேறு நேரங்களில் இவ்வாறான கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.