இரணைதீவில் முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அரசு தீர்மானிப்பதற்கு பின்னால் பாரிய சதி..!

ஆசிரியர் - Editor I
இரணைதீவில் முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அரசு தீர்மானிப்பதற்கு பின்னால் பாரிய சதி..!

கிறிஸ்த்தவ மதத்தை பின்பற்றும் மக்கள் மிக நீண்டகாலம் பூர்வீகமாக வாழ்ந்த இரணைதீவு மண்ணில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அரசு முயற்சிப்பது மத முரண்பாட்டை துாண்டும் முயற்சியாகும். 

மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், மத முரண்பாட்டின் ஊடாக சிறுபான்மை மக்களிடம் முரண்பாடுகளை வலுப்படுத்த அரசு சதி திட்டம் தீட்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். 

கிளிநொச்சியில் இன்று ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், ஜனாசா நல்லடக்கம் கடந்த நாட்களில் முஸ்லிம் மக்களால் கோரப்பட்டு வந்த முக்கியமான விடயமாகும். 

அதனை நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்ற போராட்டத்திலும் வலியுறுத்தப்பட்டது. தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தீர்மானமானது இரு சிறுபாண்மை இனங்களிற்குமிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் 

செயற்பாடாகவே பார்க்க வேண்டும். அதாவது இரணைதீவு என்பது கிறிஸ்தவ மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த இந்த தீவு பிரதேசத்திலே கடந்த 1990 முதல் 2017வரை கடற்படையினரின் கிராமமாக இருந்துள்ளது.  கிளிநொச்சி மாவட்டத்திற்கேயான ஒரு தனித் தீவாகும். 

அங்கு கடலட்டை உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரம் சார் விடயங்களை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். பெரும் மக்கள் போராட்டத்தின் மூலம் இந்த தீவில் அவர்கள் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இதில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது என்பது 

ஒரு பொருத்தமான விடயமாக அமையாது. குறிப்பாக கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கின்ற ஜனாஸாக்களை அவர்களுடைய சமய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் இலங்கை அரசு இதனை மறுத்து வந்தது. 

விஞ்ஞான ரீதியிலும் அடக்கம் செய்யலாம் என கூறப்பட்டது. தற்போது குறிப்பாக முஸ்லிம்கள் தங்களுடைய ஜனாஸாவை அடக்கம் செய்ய கொஸ்தாவத்தை பகுதியில் இந்த உடல்கள் அடக்கம் செய்வதற்கு அனுமதிக்குமாறு அவர்கள் கேட்டிருக்கிறார்கள். 

ஆனாலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட இரணைதீவு என்ற இடத்திலேயே அடக்கம் செய்ததாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பெரும்பான்மையாக கிறிஸ்தவர்களும், தமிழ் மக்களும் வாழுகின்ற ஒரு பிரதேசம் இரணைதீவு. 

இந்த பிரதேசத்திலேயே ஜனாசாக்களை அடக்கம் செய்வது என்பது ஒரு இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் செயற்பாடாகும். இவ்விடயம் தொடர்பில் தமிழ் மக்களும், இஸ்லாமிய மக்களும் நிதானமாக சிந்தித்து செயற்பட வேண்டும். 

சிறுபாண்மை இனங்களை பிரித்தாளும் கைங்கரியத்தை சிங்கள அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது. சிறுபாண்மை இனங்களின் ஒற்றுமையை சிதைப்பதற்கு இவ்வாறான தீர்மானங்களை அவர்கள் எடுக்கின்றார்கள்.

குறிப்பாக ஜெனிவா அமர்வில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெற்று தமக்கு சாதகமாக்கிக்கொள்வதற்கு அரசு முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்த்ரார்.

ஜனாசா புதைப்புக்கு தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்ட்டால் அதற்கு ஆதரவாக செயற்படுவீர்களா என ஊடகவியலாளர் அவரிடம் வினவியபோது, அரசு குறித்த நடைமுறையை அமுல்படுத்துமிடத்து அவ்விடயம் தொடர்பில் நிதானமாகவே சிந்தித்து செயற்படுவோம். 

போராட்டங்களில் ஈடுபடுவது உள்ளிட்ட விடயங்களை அந்தந்த நேரங்களில் ஆராய்ந்தே செயற்படுவோம் எனவும் தெரிவித்த சிறிதரன், சிறுபான்மை இனங்களிற்கிடையிலான முரண்பாட்டை தவிர்க்கும் வகையில் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளவும், 

சிந்தித்து செயற்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு