கிளிநொச்சியில் நடந்த உருக்கமான சம்பவம்! யார் இந்த தந்தை? உண்மையான போராளி?

ஆசிரியர் - Admin
கிளிநொச்சியில் நடந்த உருக்கமான சம்பவம்! யார் இந்த தந்தை? உண்மையான போராளி?

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் மனைவி யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார்.

இந்நிலையில் மனைவியி்ன் இறுதி நிகழ்வுகள் நேற்று கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் நடைபெற்றது. மனைவியின் இறுதி நிகழ்வுக்கு காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் ஆனந்தசுதாகர் அழைத்து செல்லப்பட்டு மூன்று மணித்தியாலயங்கள் மனைவியின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் வாகனத்தில் ஏற்றப்பட்டு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இவ்வாறான சூழ்நிலையில் சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரன் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

2007 ஆம் ஆண்டு கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலையில் உள்ள இலங்கை ராணுவத்தின் முக்கிய இலக்கொன்று விடுதலைப் புலிகளால் குறி வைக்கப்படுகின்றது.

புலனாய்வு போராளிகளின் சரியான தகவல்களுடன், கரும்புலிகளின் தாக்குதல் படையணியின் உதவியுடன், அந்த தாக்குதலுக்கான நேரம் குறிக்கப்படுகிறது.

தாக்குதல் நேரம் 9 மணி 20 நிமிடம் தொடக்கம் 10 மணி 20 நிமிடம் வரையாகும். குறிப்பிட்ட நேரத்தில் தாக்குதல் மிகக் கச்சிதமாக நடத்தப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு உதவியாக இருந்தார், திட்டங்களை வகுத்தார், வெடிபொருட்களை நகர்த்தினார் என்றும், விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் 10 வருடத்திற்கும் அதிக காலம் அங்கம் வகித்தார் என்றும், இன்னும் பல பயங்கரவாத குற்றச் செயல்களின் கீழும் சந்தேக நபராக தேடப்பட்ட ஆனந்த சுதாகரன் 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்படுகிறார்.

கைது செய்யப்பட்ட தருணத்தில் ஆனந்த சுதாகரன் வயது 27 நிரம்பியவராகவும், இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையாகவும் இருந்தார்.

4 ஆம் மாடியில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், வலுக்கட்டாயமாக நிர்பந்திக்கப்பட்டு குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்திட வைக்கப்பட்டார்.

பயங்கரவாத புலனாய்வு பிரிவின் நிலக்கீழ் இருட்டறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆனந்த சுதாகரனிடம் அன்றிரவு கொலைவெறியுடன் வந்த பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் “ஒப்புதல் வாக்குமூலத்தில் நீ கையெழுத்திடாவிட்டால், உன்னை கொன்று தூக்கில் போட்டுவிட்டு நீ தற்கொலை செய்ததாக வழக்கை முடித்து விடுவோம்” என்ற இறுதிகட்ட கொடூர சித்திரவதையின் பின்னரே, அவர்களின் அதிகொடூரமான சித்திரவதை தாங்கமுடியாமல் கை, கால் நகங்கள் பிடுங்கபட்ட நிலையில், கடும் வலிக்கு மத்தியில் ஆனந்த சுதாகரன் கையெழுத்திட்ட நிரூபிக்கக் கூடிய சாட்சிகள் எதுவும் அற்ற பொய்யான ஒப்புதல் வாக்குமூலமே அவரது வாழ்க்கை முடிவிற்கு காரணமாகிவிடுகின்றது.

இவர் செய்ததாக கூறப்பட்ட குற்றங்களுக்கு எதிராக எந்தவிதமான சரியான சாட்சிகளோ, ஆதாரங்களோ நீதிமன்றத்தில் பொலிஸாரால் நிறுத்தப்படவில்லை. அவருக்காக நீதிமன்றத்தில் வாதாடிய சட்டத்தரணிகளின் அசமந்தமே ஒரு அப்பாவியை ஆயுள் தண்டனைக் கைதியாக்கியது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தின் 8 ஆம் இலக்க அறையில், வழக்கு இலக்கம் HC6656-13 மீது நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளிக்கிறார்.

சுதாகரன் உட்பட மேலும் 2 பேருக்கு ஆயுட்கால தீர்ப்பளித்த நீதிபதி அன்றைய தினம் ஓய்வு பெற்றுச் சென்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது

இன்று கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்ற அவரின் இறுதி நிகழ்வுக்கு காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் ஆனந்தசுதாகர் அழைத்து செல்லப்பட்டு மூன்று மணித்தியாலயங்கள் மனைவியின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மனைவியான யோகராணி ஆனந்த சுதாகரன் (36 வயது) உடல் நலக் குறைவால் கடந்த 15 ஆம் திகதி காலமானார். சாதாரண ஆஸ்துமா நோயாளியான அவர் தனது கணவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு பின்னர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அதிக யோசனை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தினால் மிக அதிகமாக பாதிப்படைந்தார். அதன்தாக்கமே அவரை மரணம் வரை கொண்டு சென்றது.

மரண சடங்குகள் முடிந்த பின்னர் மூத்த மகன் மயானத்திற்கு கொள்ளி வைப்பதற்காக சென்ற வேளை அரசியல் கைதியான சுதாகரன் மீண்டும் சிறைக்கு திரும்பவதற்காக சிறைச்சாலை வாகனத்தில் ஏறினார். அவ்வேளை, யாரும் சற்று எதிர்பார்க்காத விதமாக அவரது 10 வயது நிரம்பிய மகளும் சிறைச்சாலை வாகனத்திற்குள் ஏறிவிட்டார்.

தந்தையின் சிறைச்சாலை வாகனத்தில் அவரது மகள் ஏறியமை அனைவரதும் மனத்தை நெகிழ வைத்துள்ளது. பலரது மனங்களை இந்த சம்பவம் நொருக்கிவிட்டது. வலுக்கட்டாயமாக மகளை சிறைச்சாலை அதிகாரிகள் பிடித்து கீழிறக்கும் போது ஒன்றுமே அறியாத அந்த குழந்தை தன் தந்தையை பார்த்து “அப்பா நாளை மறுதினம் மீண்டும் வருவீர்களா அப்பா” என சுதாகரிடம் கேட்டது கொடுமையின் உச்சகட்ட நிமிடமாக உணரப்பட்டது.

இவருடைய வழக்குக்கான தாய் சுமதி சொத்துக்களை விற்று வாதாடி வந்த நிலையில் தற்போது வசிப்பதற்கு வீடின்றி உள்ளார் எனத் தெரிய வருகிறது

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு