8 வருடமாக கிண்ணம் வெல்ல இயலாத கோலி!! -தலைமை பொறுப்பை பறியுங்கள் கம்பீர் ஆவேசம்-

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பிளே ஓப் சுற்றுடுடன் வெளியேறியுள்ளது. இதுவரை கோப்பை வெல்லாத அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைவராக 8 ஆண்டுகளாக உள்ள விராட் கோலியை, தலைமை பொறுப்பில் இருந்து அணி நிர்வாகம் நீக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சாடியுள்ளார்.
இணையத்தளம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-
ஆர்.சி.பி அணியின் வெற்றி, தோல்விகளுக்கு விராட் கோலி பொறுப்பேற்க வேண்டும். 8 வருடங்களாக விளையாடியும் ஐ.பி.எல் கோப்பையை அவரால் பெற்றுத் தர முடியவில்லை. 8 வருடங்கள் என்பது நீண்ட காலம்.
வேறு எந்த தலைவராவது 8 வருடங்கள் விளையாடி வெற்றிக்கிண்ணத்தை பெற்றுத் தராமல் இருந்திருந்தால் அவரால் அதே அணியில் தலைவராக இருந்திருக்க முடியுமா? எனவே இதற்கு கோலி பொறுப்பேற்க வேண்டும். ஒரு வருடம் மட்டும் சரியாக விளையாடவில்லை என்பதற்காகச் சொல்லவில்லை. ஆனால் நடந்ததற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
அஸ்வினுக்கு என்ன நடந்தது என்று பாருங்கள். 2 வருடங்களாக அவரால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஐ.பி.எல் வெற்றிக்கிண்ணத்தை பெற்றுத் தர முடியவில்லை. உடனே அவரை நீக்கிவிட்டார்கள். டோனி, ரோகித் சர்மா, கோலி பற்றி பேசுகிறோம். டோனி 3 முறையும் ரோகித் சர்மா 4 முறையும் ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ளார்கள்.
அதனால் தான் அவர்களால் நீண்ட நாளாக தலைவராக இருக்க முடிகிறது. 8 வருடங்களாக ஐ.பி.எல் வெற்றிக்கிண்ணத்தை பெற்றுத் தந்திருக்காவிட்டால் ரோகித் சர்மாவையும் தலைவர் பதவியிலிருந்து நீக்கியிருப்பார்கள்.
தலைவர் என்ற முறையில் பாராட்டுக்களை பெற்றுக்கொள்ளும் போது விமர்சனங்களையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்றார்.