யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பு கணவன், மனைவி உட்பட 3 பேர் சிக்கினர்..! மேலும் பல மோசடிகளுடனும் தொடர்பு..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொள்ளையடித்த நகைகளை வாங்கிய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ் மாவட்டத்தில் அண்மைய நாட்களாக வயோதிபர்கள் வாழும் வீடுகளை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றன.குறிப்பாக சாவகச்சேரி, கொடிகாமம், சுன்னாகம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உள்ள வயோதிபர்களின் வாழும் வீடுகளில் 

அண்மைய நாட்களாக உடைக்கப்பட்டு திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வந்தன.இந்த சம்பவங்கள் தொடர்பில் குறித்த பிரதேசத்தின் பொலிஸ் நிலையங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரான்சிஸ் தலைமையிலான குழுவினர் 

விஷேட விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இந்த திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்பு பட்டவர் என்று கூறப்படும் பிரதான சந்தேகநபர் இன்று சுன்னாகத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 

அவரது மனைவியும் திருடப்பட்ட நகைகளை கொள்வனவு செய்த நகைக்கடை உரிமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 6 பவுன் நகைகளும் 20 பவுன்களுக்கான அடகு வைக்கப்பட்ட பற்றுச்சீட்டுக்களும் 

பல தேசிய அடையாள அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் சந்தேகநபரின் உடமையில் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொடிகாமம் பகுதியில் கடந்த ஓகஸ்ட் மாதம் பத்தாம் திகதி இரவு வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கி 

மூன்றரை பவுண் நகைகளை கொள்ளையடிக்கப்பட்டது.இது தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் சுன்னாகம் பகுதியில் கடந்த மே மாதம் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் 4 லட்சம் ரூபாய் பணமும் 5 பவுன் நகைகளை கொள்ளையடிக்கப்பட்டது. 

இது தொடர்பிலும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.கடந்த ஏப்ரல் மாதம் சாவகச்சேரி பகுதியில் வயோதிபர் ஒருவரின் வீட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட சம்பவம் மற்றும் பூநகரியில் 5 லட்சம் ரூபாய் பணம் மோதிரம் போன்றவற்றை திருடியமை போன்ற சம்பவங்களுடன் 

தொடர்புடைய பிரதான சந்தேக நபரான இவர் பல மாதங்களாக தலை மறைவாக இருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர் மற்றும் அவருடைய மனைவி நகைகளை கொள்வனவு செய்த நகைக்கடை உரிமையாளர் ஆகியோரிடம் 

பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு