சம்பந்தன் போட்டியில் இருந்து விலகி ரூபனுக்கு வழி விட வேண்டும்! - விக்கி கோரிக்கை.

ஆசிரியர் - Admin
சம்பந்தன் போட்டியில் இருந்து விலகி ரூபனுக்கு வழி விட வேண்டும்! - விக்கி கோரிக்கை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களின் தலைநகரம் திருகோணமலையை நேசிப்பவராக இருந்து அதனைப் பாதுகாக்க விரும்பினால் தேர்தல் போட்டியில் இருந்து ஒதுங்க வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன், துடிப்பும், ஆற்றலும், அறிவும் கொண்ட தம்பி ரூபனுக்கு வழிவிட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று ( வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில்,

எனது அன்புக்குரிய திருகோணமலை மக்களே, இந்தத் தேர்தல் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானது. இதனை நீங்கள் சரியாகப் பயன்படுத்த தவறினால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்போது நாம் எமது நிலம், அடையாளம் ஆகியவற்றை எல்லாம் இழந்து அரசியல் அநாதைகளாகும் நிலையில் இருப்போம்.

அம்பாறையையும், திருகோணமலையையும் ஏறத்தாழ முழுமையாக கபளீகரம் செய்துள்ள சிங்கள பௌத்த பேரினவாதம், இன்று மட்டக்களப்பை முழுவதுமாக விழுங்குவதற்கு திட்டங்களை வகுத்துள்ளது. தொல்பொருள் அடையாளமிட்ட இடங்களாக 164 இடங்கள் ஆரம்பத்தில் குறிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவை 600 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதேபோல, திருகோணமலையில் எஞ்சியுள்ள தமிழர் நிலப்பரப்புக்களையும் கபளீகரம் செய்யும் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக, புல்மோட்டையில் தென்னைமரவடி மற்றும் குச்சவெளியில் ஏறாமடு ஆகிய இடங்களில் சிங்கள குடியேற்றங்கள் நிறுவப்படுகின்றன. இவ்வாறு மேலும் பல இடங்களில் சிங்கள குடியேற்றங்கள் அண்மைக் காலப்பகுதியில் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

1827 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த திருகோணமலையிலும் 18,000 (81 வீதம்) தமிழ் மக்கள் வாழ்ந்தபோது 250 இற்கும் குறைவான சிங்கள மக்களே வாழ்ந்ததாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இன்று ஏறத்தாழ சிங்களவர்களின் எண்ணிக்கையும் தமிழ் மக்களின் எண்ணிக்கையும் ஒரே அளவு. முஸ்லிம்களின் எண்ணிக்கை எம்மை விட அதிகம். இன்னும் ஓரிரு வருடங்களில் நாம் சிறுபான்மையினர் ஆவோம்.

காலம்காலமாக நாம் பிதிர்கடன்களை நிறைவேற்றிவந்த கன்னியா வெந்நீரூற்றை சிங்கள பௌத்த பேரினவாதம் இன்று ஆக்கிரமித்துள்ளது. எமது புகழ்பெற்ற கோணஸ்வரர் ஆலயம் முன்னர் கோகன்ன விகாரையாக இருந்ததாக புதிய ஒரு கதையை தற்போது அவிழ்த்து விட்டுள்ளனர். இது கோணேஸ்வரர் ஆலயத்தில் கைவைக்கும் அவர்களின் எண்ணத்தைக் காட்டுகின்றது.

இன்று எமக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளமைக்கு காரணம் கடந்த 10 வருடங்களில் சரியான ஒரு அரசியல் தலைமைத்துவம் எமக்கு இல்லாமல் போனமையே ஆகும்.

1977 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றம் சென்ற மறுவருடம் திருகோணமலையின் மூன்றில் இரண்டு நிலப்பரப்பை சேருநுவர என்ற புதிய பிரதேச சபையாக உருவாக்கி பிரித்தெடுத்தார்கள்.

சம்பந்தன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அலுவலகத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தபோது கன்னியா வெந்நீரூற்று ஆக்கிரமிக்கப்பட்டு புல்மோட்டையில் சிங்களக் குடியேற்றம் நிறுவப்பட்டது. பெரும்பான்மை பலம் பெற்றிருந்தும் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரசுக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது. திருகோணமலையை பாதுகாப்பதற்கு சம்பந்தன் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதே உண்மையானது.

5 வருடங்களுக்கு முன்னர் பார்த்த பின்னர் தற்பொழுதுதான் சம்பந்தன் ஐயாவைத் தாம் காணுவதாக நான் கடந்த வாரம் அங்கு சென்றபோது பொதுமக்கள் என்னிடம் கூறினர். திருகோணமலை மாவட்டத்தில் தங்கி இருந்து அந்த மக்களின் குறைகளை அறிந்து எங்கெல்லாம் அநீதி இடம்பெறுகின்றதோ அங்கெல்லாம் சென்று அவற்றை தீர்க்கும் விருப்பமும் ஆற்றலும் உள்ள ஒருவரே திருகோணமலைக்கு இப்பொழுது தேவை.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் ரூபன் என்று அழைக்கப்படும் ஆத்மலிங்கம் ரவீந்திராவே அதற்கு தகுதியானவர். அரசியலில் தனது முகவரியை தொலைத்து நின்ற சம்பந்தனுக்கு மீண்டும் முகவரியை பெற்றுக்கொடுத்ததுகூட ரூபனே.

தம்பி பிரபாகரனினால் சிறந்த ஆளுமையும் நிர்வாக திறனும் கொண்டவர் என்று அடையாளம் காணப்பட்டவர் ரூபன். பல பொறுப்புக்களை நிழல் அரசாங்கத்தில் வகித்து அரசியல், பொருளாதார ரீதியாக அளப்பெரும் சேவைகளை அவர் செய்துள்ளார்.

திருகோணமலை மக்களே! ரூபன் உங்களுக்காக உயிரையும் துச்சமாக மதித்து போராடியவர். உங்களுக்காக உங்களோடு வாழ்ந்தவர். அவர் உங்களுக்கு புதியவரல்ல. அறிவாற்றல், நிர்வாகத்திறன் தேசப்பற்று, எளிமை, துடிப்பு போன்ற நற்பண்புகளும் பலதிறமைகளும் ஒருங்கே அமைந்தவர். ரூபன் திருகோணமலையை பாதுகாப்பார். அவரை நீங்கள் நம்புங்கள். அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்.

இறுதியாக சம்பந்தன் அவர்களுக்கு நான் ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன். தயவுசெய்து கடந்த காலத்தில் நீங்கள் விட்ட தவறுகளை உணர்ந்து உங்களுக்கு மீண்டும் அரசியல் முகவரியை பெற்றுக் கொடுத்த உங்கள் தம்பி ரூபனுக்கு வழிவிடுங்கள். உங்களால் செய்யமுடியாதவற்றை உங்கள் தம்பி செய்வார். தமிழ் மக்களின் தலைநகரமும் எங்கள் பூர்வீக பூமியுமான திருகோணமலை பாதுகாக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களாயின் போட்டியில் இருந்து ஒதுங்கி ரூபனுக்கு சந்தர்ப்பம் கொடுங்கள்!

ரூபனுக்கு நீங்கள் விட்டுக்கொடுப்பதன் மூலம் நீங்கள் தோற்க மாட்டீர்கள். மாறாக நீங்கள் வெல்வீர்கள். திருகோணமலை மக்கள் வெல்வார்கள். ஆகவே, நீங்கள் அவ்வாறு செய்தால், வரலாறு உங்களைப் புகழும். திருகோணமலை மக்கள் உங்களைப் போற்றுவார்கள். திருக்கோணேஸ்வர பெருமான் உங்களை ஆசீர்வதிப்பார்.

நான் அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கு காரணமாக இருந்தவர் நீங்கள்தான் என்பதை நான் மறக்கவில்லை. உங்கள் மீது என்றும் எனக்கு மரியாதை உண்டு. ஆனால், இந்த நாட்டில் தமிழ் மக்களின் இருப்பையும் அவர்களின் உரிமைகளையும் முதன்மைப்படுத்தி உங்களை எதிர்த்து அரசியல் செய்யும் ஒரு நிலைமையினை காலம் எனக்கு வகுத்திருக்கிறது. என் கடமைகளில் இருந்து சரியமாட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு