சுகாதார பரிசோதகரைத் தாக்கிய கிறீம் ஹவுஸ் உரிமையாளருக்கு விளக்கமறியல்!

ஆசிரியர் - Admin
சுகாதார பரிசோதகரைத் தாக்கிய கிறீம் ஹவுஸ் உரிமையாளருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணத்தில் வீதியில் கழிவுப் பொருள்களை வீசுவதை தடுத்த பொதுச் சுகாதாரப் பரிசோதகரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வர்த்தகரை வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.     

யாழ்ப்பாணம் அத்தியடி பகுதியில் வீதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் ஒருவர் கழிவுப்பொருள்கள் அடங்கிய பொதியை வீசுவதற்கு முற்பட்டதை அவதானித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர், அதனைத் தடுக்க முற்பட்டுள்ளார்.அதனால் இருவருக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

பொதுச் சுகாதாரப் பரிசோதகரைத் தாக்கிவிட்டு குப்பைப் பொதியை வீசிவிட்டு அந்த நபர் தப்பித்திருந்தார். சம்பவத்தில் காயமடைந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.

தாக்குதல் நடத்தியவரின் மோட்டார் சைக்கிள் இலக்கத் தகட்டின் அடிப்படையில் அவருக்கு எதிராக யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள கிறீம் ஹவுஸின் உரிமையாளரை நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மக்கள் சுகாதாரப் பரிசோதகரைத் தாக்கியதாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் இன்று முற்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிவான் ஏ.பீற்றர் போல், சந்தேக நபரை வரும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு