கூட்டமைப்பில் 'சீட்' கேட்ட கருணா!

ஆசிரியர் - Admin
கூட்டமைப்பில் 'சீட்' கேட்ட கருணா!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிட கருணாவுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியுள்ளோம். எனினும் கூட்டமைப்பு அவருக்கு இடமளிக்கத் தயாராக இல்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் வ.கமலதாஸ் தெரிவித்தார். இன்று வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

'' தமிழருக்கு செயல்திறன் மிக்க தலைவர்கள் வேண்டும். விக்னேஸ்வரன் நீதியரசராக இருந்த காலத்தில் வழங்கிய தீர்ப்புக்களும், தண்டணைகளும் எங்களுடைய தமிழ் மக்களுடைய நிலபுலங்கள் பறிபோவதற்கான முன்னுதாரணமாகவே அமைந்திருந்தன. சட்டக்கோவையை படித்தவர்களுக்கு இது நன்கு தெரியும். அரச காணி என்ற பேரில் தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளும் பூர்வீக காணிகளும் அபகரிக்கப்பட்டிருக்கின்றன.

வேடுவ மக்களுடைய வெம்பு பூமி என்று சொல்லக்கூடிய அவர்களின் வாழ்வாதார நிலங்களும் அழிக்கப்பட்டிருக்கின்றன. காணி அபகரிப்பு சட்டத்தின் கீழ் சிறீலங்கா சுதந்திர கட்சியால் கைப்பற்றப்பட்ட காணிகள் இன்று வரை தமிழ் மக்களுக்கோ, சிறுபான்மை மக்களுக்கோ வழங்கப்படாமல் இன்று வரை கபடத்தனமாக மண் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

இன்று பலர் நீதியரசர் என்றும் சட்டத்தரணிகள் என்றும் வந்தாலும் கூட அவர்கள் இந்த காணி அபகரிப்புக்கு எதிராக குரல் கொடுத்ததும் இல்லை அதனை முறியடித்ததும் இல்லை. அவ்வாறானவர்களின் அரசியல் போராட்டம் ஜனநாயக ரீதியாக மக்களுடைய அங்கீகாரத்தை ஏமாற்றி பெற்றமையேயாகும். இவர்கள் இதுவரை எந்த சாதனையைதான் செய்திருக்கிறார்கள்.

எந்த சட்டத்தை தான் உடைத்திருக்கிறார்கள் அதனை நிரூபித்துக் காட்டட்டும் பார்ப்போம். இவ்வாறானவர்களை மீண்டும் மீண்டும் வாக்களித்து தெரிவு செய்வதற்கு நாங்கள் கொத்தடிமைகள் அல்ல. அவர்கள் சரியான ஒரு தலைமையை முன்வைப்பார்களேயானால் விக்னேஸ்வரன் அல்ல செயற்திறன் உள்ள தலைமையை முன்வைத்தால் எமது கட்சி ஆதரவளிக்கதான் போகிறோம். உறுதியானதும் பற்றுறுதியும் நேர்மையுமான செயற்திறன் உள்ள ஒருவரை வேட்பாளராக நியமியுங்கள் என தமிழரசு கட்சியிடம் நான் கூறியிருந்தேன்.

அது மாத்திரமின்றி எங்களுடைய கட்சியின் தலைவர் கருணாவுக்கு மாத்திரம் கிழக்கு மாணாகத்தில் கூட்டமைப்பில் சந்தர்ப்பம் தாருங்கள் எனவும் கேட்டிருந்தோம். அவ்வாறு அவருக்கு சந்தர்ப்பம் தந்தால் பின்புலமாக இருந்து நாமும் செயற்பட்டு 22 அல்ல 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை வடக்கு கிழக்கு மலையகம் கொழும்பு உட்பட்ட பகுதிகளில் பெறுவதற்கு முயற்சிப்போம் என கூறினோம்.

ஆனால் அந்த தலைக்கனமிக்க பிரபுத்துவ சிந்தனை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை வழி நடத்திக் கொண்டிக்கிறவர்கள் இன்று வரை இறங்கி வந்ததாக இல்லை. ஆனாலும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்கள் இன்றும் எம்முடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு