யாழ்.குடாநாட்டை அச்சுறுத்தும் தெரு நாய்கள்..! கடந்த வருடம் மட்டும் 5010 பேர் பாதிப்பு. கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை..
யாழ்.மாவட்டத்தில் கடந்த வருடம் 5010 பேர் நாய்கடிக்கு இலக்காகி உள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த சிந்தனையில் தெருநாய்களை அழிப்பது தடை செய்யப்பட்டதனால் தெருநாய்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது.
இதன் அடிப்படையில் வளர்ப்பு நாய்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தற்போது தெரு நாய்களின. எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.
இந்நிலையில் யாழ்.மாநகர சபை எல்லைகுள் மட்டும் 5 ஆயிரத்து 713 வளர்ப்பு நாய்களிற்கு விசர் நாய் தடுப்பூசி போடப்பட்டதன் மூலம் இதனைவிட அதிகமான வளர்ப்பு நாய்கள் மற்றும் தெருநாய்கள் உள்ளமை உறுதியாவதோடு தெருநாய்களின் எண்ணிக்கையை கணக்கிடவும் முடியவில்லை.
இவ்வாறு நாய்கள் பல்கிப் பெருகும் நிலையிலேயே கடந்த ஆண்டு மட்டும் யாழ்.குடாநாட்டில் நாய்கடிக்கு இலக்காகி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையினை நாடியவர்களின் எண்ணிக்கையே 5 ஆயிரத்து 10 பேர் என போதனா வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.