யாழ்.பேருந்து நிலைய மோதலில் நடத்துநர் உள்ளிட்ட இருவர் காயம்! இருவர் பொலிஸாரால் கைது

ஆசிரியர் - Admin
யாழ்.பேருந்து நிலைய மோதலில் நடத்துநர் உள்ளிட்ட இருவர் காயம்! இருவர் பொலிஸாரால் கைது

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று மதியம் இரு தரப்பினருக்கு இடையில் நடந்த மோதலில் நடத்துநர் உள்ளிட்ட இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இருவர் பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

பேருந்து நிலையத்துக்குள் வியாபாரம் செய்யும் வாகனத்தை பேருந்து நிலையத்துக்குள் கொண்டு செல்ல முற்பட்ட போது, பாதுகாப்பு உத்தியோகத்தர் அனுமதிக்கவில்லை. அதனால் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் அவர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பாதுகாப்பு உத்தியோகத்தர் தாக்குதலுக்கு உள்ளானர்.

பேருந்து நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிராக அங்கு கூடிய இ.போ.ச சாரதிகள், நடத்துனர்கள் திடீர்ப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

வியாபாரிகள் சிலர் மற்றும் முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவரும் சேர்ந்து கடைகளுக்குள் இருந்த கம்பிகள், கத்தரிக்கோல் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து பாதுகாப்பு உத்தியோகத்தரையும், நடத்துனரையும் கண்மூடித்தனமாகத் தாக்கினர் என்று சம்பவ இடத்தில் நின்றவர்களால் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்பட்ட இருவரைக் கைது செய்தனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது என்று நம்பப்படும் இரும்புக் கம்பி, கொட்டன், கத்தரிக்கோல் என்பவற்றை பொலிஸார் மீட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு