தலைமறைவாக உள்ள சிறிகஜன் குறித்து விசாரிக்க மேல்நீதிமன்றம் உத்தரவு!

ஆசிரியர் - Admin
தலைமறைவாக உள்ள சிறிகஜன் குறித்து விசாரிக்க மேல்நீதிமன்றம் உத்தரவு!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான குற்றவாளியை தப்பிக்கவிட்டார் என்று குற்றம்சாட்டப்படும், முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை குறித்து உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதலாவது சந்தேகநபரான வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க முன்னிலையானார். இரண்டாவது சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளதால் அவர் மன்றில் முன்னிலையாகவில்லை.

இந்நிலையில், இரண்டாவது சந்தேகநபர் எங்கே? அவர் குறித்த தகவல் உண்டா? என்று வழக்குத் தொடுனரிடம் மன்று கேள்வியெழுப்பியது. இரண்டாவது சந்தேகநபர் சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் உள்ளார் என்று பொலிஸாரால் தெரிவிக்கப்படுகிறது. எனினும் அதன் உண்மைத் தன்மை குறித்து வெளிப்படுத்தப்படவில்லை. அவர் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர் என்று அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் மன்றுரைத்தார்.

இதனையடுத்து இரண்டாவது எதிரி குறித்து உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தல் வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 27ஆம் திகதிவரை ஒத்திவைத்தார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு