நாவாந்துறையில் வெடிக்கும் புதிய பிரச்சினை! - காணி உரிமை, மாதா சுருவத்தினால் சர்ச்சை

ஆசிரியர் - Admin
நாவாந்துறையில் வெடிக்கும் புதிய பிரச்சினை! - காணி உரிமை, மாதா சுருவத்தினால் சர்ச்சை

யாழ்ப்பாணம், நாவாந்துறைப் பகுதியில் காணி உரிமை தொடர்பாக, முஸ்லிம் வர்த்தகருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை அடுத்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.  

யாழ்ப்பாணம் நாவாந்துறை, பொம்மைவெளிப் பகுதியில் யாழ்.மாநகர சபையால் முன்னர் கழிவுகள் கொட்டப்பட்ட காணிக்கு, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஏற்பாட்டில் மாநகர சபை உறுப்பினரான நிலாம் என்பவரால் வேலி போடப்பட்டது. அந்தக் காணியில் முஸ்லிம்களை குடியேற்றும் வகையில் தொடர்மாடி ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ரிஷாட் பதியுதீன் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது தெரிவித்திருந்தார்.

அந்தக் காணிக்குள் நுழைந்த நாவாந்துறையைச் சேர்ந்த தமிழ் மக்கள், அது அரச காணி என்றும் அதனை முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் அபகரித்து வைத்துள்ளார் என்றும் தெரிவித்தனர். அத்துடன், குறித்த காணியில் நாவாந்துறையைச் சேர்ந்த காணியற்ற தமிழ் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.

இதையடுத்து, அப்பகுதிக்கு சென்ற யாழ்.மாநகர சபை உறுப்பினர் நிலாம், அந்தக் காணிக்கான உறுதி தம்மிடம் இருப்பதாகவும் அதனை அரச காணி எனத் தெரிவித்து எவரும் நுழைய முடியாது என்றும் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்தார்.

சம்பவ இடத்துக்கு சென்ற யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன், அதனை அரச காணி எனத் தெரிவித்ததுடன், தனியாரிடம் உறுதி இருப்பது குறித்து ஆராயவுள்ளதாகவும், பிரதேச செயலகத்துக்கு வந்து அதிகாரிகளுடன் கலந்துரையாடுமாறும் பொது மக்களிடம் தெரிவித்தார்.

இதனிடையே, யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் நிலாம் வழங்கிய முறைப்பாட்டையடுத்து அங்கு சிறப்பு அதிரடிப் படையினரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டனர். அதனால் சிறு பதற்றம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்றிரவு குறித்த காணியில் மாதா உருவச்சிலை ஒன்றும் இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று காலை குறித்த காணிப் பகுதிக்கு முஸ்லிம் மக்கள், மாநகரசபை பிரதிநிதிகள் மற்றும் குறித்த காணியின் உரிமையாளர் ஆகியோர் வருகை தந்து காணியை பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு