நள்ளிரவில் சீனர்களை சந்திக்கும் பழக்கமில்லை! - மணிவண்ணனுக்கு விக்கி பதிலடி

ஆசிரியர் - Admin
நள்ளிரவில் சீனர்களை சந்திக்கும் பழக்கமில்லை! - மணிவண்ணனுக்கு விக்கி பதிலடி

நள்ளிரவில் சீனர்களைச் சந்திக்கும் பழக்கம் எனக்கு இல்லை என்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் மணிவண்ணனுக்குப் பதிலடி கொடுத்துள்ளார், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி. விக்னேஸ்வரன்.

கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை விக்னேஸ்வரன் தொடர்ந்தும் வலியுறுத்தினால், அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் மணிவண்ணன் தெரிவித்திருந்தார்.

இந்த விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும், தமிழ் மக்கள் கூட்டமைப்பின் தலைவர் விக்னேஸ்வரனுக்கும் வித்தியாசம் இல்லை என்றும் மணிவண்ணன் கடுமையாகச் சாடியிருந்தார்.

இதுதொடர்பாக, ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள, சீ.வி. விக்னேஸ்வரன், மணிவண்ணனுடைய அவ்வாறானதொரு பேச்சை தான் அறியவில்லை என்று கூறியுள்ளார்.

"என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அதில் அம்பலத்துக்கு வராத அந்தரங்கங்கள் இருந்தால் அவற்றை அறிய நானும் ஆவலாய் இருக்கின்றேன். நள்ளிரவில் சீனர்களைப் போய்ச் சந்திக்கும் பழக்கம் எனக்கு இல்லை" என்றும் அவர் பதிலளித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சில வாரங்களின் முன்னர் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்ட சீனத் தூதுவர் தலைமையிலான குழுவில் அங்கம் வகித்த, அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளை இரகசியமாகச் சந்தித்துப் பேசினர் என்று இணையத் தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு