25ம் திகதி நடக்கவுள்ள கதவடைப்பு மற்றும் மக்கள் போராட்டத்திற்கு ஆசிரியர் சங்கம் ஆதரவு..

ஆசிரியர் - Editor I
25ம் திகதி நடக்கவுள்ள கதவடைப்பு மற்றும் மக்கள் போராட்டத்திற்கு ஆசிரியர் சங்கம் ஆதரவு..

இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசம் வழங்க கூடாது என ஜ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு வுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நாடத்தும் போராட்ட த்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது ஆதரவி னை கூறியுள்ளது.

இது குறித்து ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் இடம்பெற்ற  போர்க்குற்றங்களின் முக்கிய விடயங்களான வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் மனிதத்துவத்துக்கு  ஒவ்வாத குற்றங்கள்  தொடர்பாக – பக்கச்சார்பற்ற விசாரணைகளை சர்வதேசம் மேற்கொண்டு 

பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னெடுக்க வேண்டும் என்னும் தீர்மானத்தை வலியுறுத்தி -  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கத்தினால் - நீதி கோரி எதிர்வரும் 25.02.2019 திங்கட்கிழமை நடத்தப்படவுள்ள கதவடைப்பு 

மற்றும் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலிலிருந்து ஆரம்பிக்கவுள்ள  பேரணி  போராட்டங்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவைத் தெரிவித்துக்கொள்கின்றது. 

அன்றைய தினம் நடைபெறவுள்ள போராட்டத்துக்கு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும் என்பதுடன் - ஆசிரியர்கள்  பூரண கதவடைப்பு போராட்டத்துக்கு மனமுவந்து ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

மாணவர்களை பெற்றோர் தமது கண்காணிப்பில் வைத்து பாதுகாக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். கடந்த இரண்டு வருடங்களாக – தமது உறவுகளைத் தேடி வீதிகளில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் தமிழ் உறவுகளுக்கு – நீதி வேண்டிய போராட்டத்துக்கு தார்மீக ஆதரவு வழங்கவேண்டியது மனிதத்துவத்தை நேசிக்கும் ஒவ்வொருவரதும் தார்மீகக் கடமையாகும். 

இத்தகைய தார்மீகப் பொறுப்பை உணர்ந்தவர்களாக – சமூகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து இப்போராட்டம் வெற்றிபெற பங்களிப்பு வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம். 

தமது உறவுகளைக் தேடி அலையும் வேதனையுடன் - கடந்த இரண்டு வருடங்களாக – வீதிகளில் இருந்து தமக்கு நீதி கோரிப் போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் உணர்வுகளுக்கு ஒவ்வொருவரும் மதிப்பளிக்க வேண்டும். 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி அலைந்து தமது இறுதிக்காலம் வரை ஏக்கத்துடனேயே தமது வாழ்வை முடித்த தாய், தந்தையருக்கும் நாம் மதிப்பளிக்கவேண்டும்.  

இந்த வகையில் - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவுகளின் 25.02.2019 திங்கட்கிழமை நடைபெறவுள்ள போராட்டங்கள்  வெற்றிபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு