தியாகி திலீபனின் நினைவு நாளுக்கு தடைபோட நினைக்கும் நல்லாட்சி..

ஆசிரியர் - Editor I
தியாகி திலீபனின் நினைவு நாளுக்கு தடைபோட நினைக்கும் நல்லாட்சி..

நல்லூரில் நடைபெறவிருக்கும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வைத் தடை செய்யும் கட்டளையைப் பிறப்பிக்குமாறு கோரி யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் மனுச் செய்துள்ளனர்.

இலங்கையிலும் உலக நாடுகளிலும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரான திலீபனை நல்லூரில் அமைந்துள்ள நினைவிடத்தில் நினைவு கூருவதைத் தடை செய்யும் கட்டளையை வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் யாழ்ப்பாணம் பொலிஸார் கோரியுள்ளனர்.

அத்துடன், நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பிகளிலான வேலியை மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள பந்தல், திலீபனின் உருவப் படத்தை அகற்றுவதற்கான கட்டளையை யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளருக்கு வழங்குமாறும் நீதிமன்றில் பொலிஸார் விண்ணப்பம் செய்துள்ளனர்.

யாழ்ப்பாண பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் முன்னிலையாகி இந்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிவானிடம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முன்வைத்தனர்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவானின் சமாதான அறையில் இந்த விண்ணப்பம் முன்வைக்கப்பட்டது.

“இலங்கையிலும் உலக நாடுகளிலும் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரை நினைவு கூருவதற்கு நல்லூரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸாரின் புலனாய்வுத் தகவல்கள் மூலம் அறியக் கிடைத்துள்ளது.

பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரான திலீபன், உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த நல்லூரில் இந்த நினைகூரல் நிகழ்வு இடம்பெறவுள்ளது. அதற்காக நல்லூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தைச் சுற்றி இரும்புக் கம்பிகளிலான வேலி அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதற்கு அருகாமையில் பந்தல் இடப்பட்டு மேசையின் மேல் திலீபனின் உருவப் படம் வைக்கப்பட்டுள்ளது.

திலீபனின் நினைவுகூரலை நடத்த தடை உத்தரவு வழங்கவேண்டும். அத்துடன், யாழ்ப்பாண மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் அந்தச் சபையின் ஆணையாளரின் அனுமதி பெறப்படாமல் சட்டவிரோதமாக இரும்புக் கம்பிகளால் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன, பந்தல் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை அந்தப் பகுதியிலிருந்து அகற்றுவதற்கு யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளருக்கு உத்தரவிடவேண்டும்” என்று பொலிஸார் தமது விண்ணப்பத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளின் விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு