தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் கூட்டமைப்பு பல உண்மைகளை மறைக்கிறது..

ஆசிரியர் - Editor I

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பல உண்மைகளை மூடி மறைத்துவருவதுடன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பு சர்வதேசத்திடமிருந்து இலங்கை அரசாங்கத்தை பாதுகாத்தும் வருகிறது.

இதனாலேயே பங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை ஆகியன இவ்வளவு தாமதமாகி வருகிறது என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார். 

தமிழ் அரசியல் கைதிகள் விடயம் குறித்து இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

2015ம் ஆண்டு ஜெனீவா தீர்மானத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும். என கூறப்பட்டிருக்கின்றது. அதற்கு இலங்கை அரசாங்கமே தனது இணக்கப்பாட்டினை தெரிவித்திருக்கின்றது. 

அதற்கான நியாயங்களாக சர்வதேச மனித உரிமைகள் கோட்பாடுகளை முற்றாக உதாசீனம் செய்வதாலும், கைதிகளின் அடிப்படை உரிமைகளை மீறுவதாலும் பயங்கரவாத தடைச்சடம் நீக்கப்படவேண்டும் என கூறப்பட்டது. 

அவ்வாறான பயங்கரமான சட்டத்தின் கீழேயே தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிளின் விடுதலையை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அணுகுமுறை மிகவும் பலவீனமானதாக உள்ளது. 

அரசாங்கமே இணங்கி நீக்குவதாக கூறிய பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் விடயத்தில் அதே அரசாங்கம் ஒன்றும் செய்யாமல் இருப்பதை தமிழ்தேசிய கூட்டமைப்பு பார்த்துக் கொண்டிருப்பதுடன், அந்த அரசாங்கத்தை பாதுகாக்கவும் செய்கிறது. 

இது எங்களுடைய பலவீனம். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க அரசு இணங்கியதாக கூறியதை பெரிய விடயமாக தூக்கி பிடித்த தமிழ்தேசிய கூட்டமைப்பு அதனை நடைமுறையில் செய்வதற்கு அரசு இதுவரை ஒன்றுமே செய்யாமையினை இலங்கை அரசுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் காட்டுவதில் தவறியுள்ளது. 

அதேபோல் பயங்கரவாத தடைச்சட்ட த்திற்கு மாற்றாக புதிய சட்டம் வருகிறது. அது இருப்பதை காட்டிலும் மோசமானது என தமிழ்தேசிய கூட்டமைப்பே பல ,டங்களில் கூறியுள்ளது. அந்த கருத்துக்கள் வெறுமனே தமிழ் மக்களுக்கு மட்டும் கூறப்படும் கருத்துக்களே தவிர, 

முன்னர் கூறியதைபோல் சர்வதேசத்திற்கு இந்த உண்மையை சுட்டிக்காட்டி அரசாங்கம் தாம் ஜெனீவாவில் இணங்கிய விடயத்தை செய்யவில்லை. என காட்டுவதற்கு தவறியுள்ளது. இதனால் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடிய அரசியல் கைதிகள் இன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

அவர்கள் பழிவாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் உரிமைகளுக்காக போராடுவது துரதிஸ்டவசமானது. மக்களின் அங்கீகாரத்தை பெற்ற அரசியல் தலமைகளே அதனை செய்திருக்கவேண்டும். 

கடந்த முறை தமது வழக்குகளை வவுனியா நீதிமன்றிலேயே நடாத்துமாறுகோரி போராட்டம் நடத்தி தயாரானபோது தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறு ப்பினர் அந்த போராட்டத்தை குழப்பினார். 

இந்த நிலையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் 8 தமிழ் அரசியல் கைதிகள் தம்மை புனர்வாழ்வு வழங்கி விடுதலை செய்யவேண்டும் எனகோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடாத்திவருகின்றனர். 

அவர்களுடைய போராட்டங்களுக்கு நாம் ஆதரவு வழங்குவதுடன் அவர்களுடைய போராட்டங்களை வலுப்படுத்தும் வகையில் போராட்டங்களை நடாத்துவதற்கான பேச்சுவார்த்தைகளையும் நாம் நடாத்த திட்டமிட்டு வருகிறோம். 

இது தொடர்பாக பொது அமைப்புக்கள், கல்வி சமூகம் உள்ளிட்ட அவைரும் ஒத்துழைப்பினை வழங்கவேண்டும். 

இது வெறுமனே அரசியல் கைதிகளுடைய பிரச்சினையோ அல்லது அவர்களுடைய குடும்பங்களுடைய பிரச்சினையோ அல்ல. இது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தினதும் பிரச்சினையும், ஒட்டுமொத்த தமிழ்சமூகத்தினது பொறுப்புமாகும். 

குறித்த தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் திட்டமிட்டு இழுத்தடிக்கப்படுகிறது என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு