பிரசித்திபெற்ற யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி வருடாந்தப் பெருந்திருவிழா நாளை ஆரம்பம்

ஆசிரியர் - Admin
பிரசித்திபெற்ற யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி வருடாந்தப் பெருந்திருவிழா நாளை ஆரம்பம்

பிரசித்திபெற்ற யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை திங்கட்கிழமை(13) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாகத் தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

12 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய வரலாற்றுப் பெருந்திருவிழாவில் ஏராளமான அடியவர்கள் ஆண்டுதோறும் கலந்து கொண்டு சிறப்பிப்பது வழக்கம். உள்நாட்டிலிருந்து மாத்திரமல்லாமல் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் பெருந்தொகையான பக்தர்கள் துர்க்கையம்பாளின் மஹோற்சவத்தில் கலந்து கொண்டு நேர்த்தி வைத்து வழிபாடு செய்வார்கள்.

நாளைய தினம் அதிகாலை-05 மணிக்குத் திருப்பள்ளி எழுச்சியுடன் தேவஸ்தான திருக்கதவு திறக்கப்பட்டு அதிகாலை-05.30 மணிக்கு காலைப் பூசை இடம்பெறும்.

அம்பாளின் வருடாந்தக் கொடியேற்றத்திற்கான வசந்தமண்டபப் பூசை காலை-08 மணிக்கு ஆரம்பாமாகும். அதனைத் தொடர்ந்து முற்பகல்-10 மணிக்கு கொடியேறி அம்பாள் அருள்பாலிப்பாள். தொடர்ந்தும் காலை, மாலை உற்சவங்களாக நடைபெறவுள்ள ஆலய மஹோற்சவ காலப் பகுதியில் அம்பாள் எழுந்தருளிப் பக்தர்களுக்குத் திருக்காட்சி வழங்குவார்.

இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-18 ஆம் திகதி சனிக்கிழமை மாலை-06 மணிக்குத் திருமஞ்சத் திருவிழாவும், 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல்-02 மணியளவில் வேட்டைத் திருவிழாவும், அன்றைய தினம் மாலை-06 மணியளவில் கைலாச வாகனத் திருவிழாவும், 22 ஆம் திகதி புதன்கிழமை மாலை-04 மணியளவில் சப்பறத் திருவிழாவும், 23 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-09 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் வெள்ளிக்கிழமை ஆவணித் திருவோண நன்னாளில் காலை-08.30 மணிக்கு ஆலயத்திற்கு முன்பாகவுள்ள துர்க்கா புஷ்கரணி தீர்த்தக் கேணியில் தீர்த்தோற்சவமும், அன்றைய தினம் மாலை-06 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும் என்றார்.

மேலும், இவ்வருட வருடாந்தப் பெருந்திருவிழாவையொட்டிய பூர்வாங்கக் கிரியைகள் இன்று பிற்பகல் அந்தணச் சிவாச்சாரியார்களால் நிகழ்த்தப்பட்டது.

இதேவேளை, இவ்வாலயப் பெருந்திருவிழாவை முன்னிட்டு ஏற்பாட்டுப் பணிகளில் தேவஸ்தானத் தலைவர், நிர்வாகத்தினர் மற்றும் தொண்டர்கள் இன்று முழுவதும் மும்முரமாக ஈடுபட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது. அத்துடன் ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு