நாளை நாடளாவிய வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு ஆசிரியசேவை சங்கம் அழைப்பு..

ஆசிரியர் - Editor I
நாளை நாடளாவிய வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு ஆசிரியசேவை சங்கம் அழைப்பு..

கல்விச் சேவையில் அரசியல் பழிவாங்கும் போர்வையில் நியமனம் வழங்குவதை எதிர்த்து நாடளாவிய ரீதியில் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவை வழங்க வேண்டுமென கல்வியைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதற்கமைய இந்தப் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவை வழங்கி அன்றையதினம் சுகயீன விடுமுறையை அனைவரும் எடுத்துக் கொள்வதுடன் கொழும்பில் நடைபெறும் கவனயீர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கல்வியைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்வேறு ஆசிரிய மற்றும் அதிபர் சங்கங்கள் இணைந்து யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடவியிலாளர் சந்திப்பின் போதே மேற்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதன் போது இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் கருத்து தெரிவிக்கையில்...

இலங்கையின் கல்விச் சேவையில் இடம்பெறும் அரசியல் தலையீடுகளை எதிர்த்து ஆசிரியர் சங்கங்கள் அதிபர் சங்கங்கள் இணைந்து நாளை 26 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அத்தோடு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் பாரிய போராட்டமொன்றையும் முன்னெடுக்க உள்ளனர்.

ஆகவே அன்றையதினம் அனைத்து அதிபர் ஆசிரியர்களும் பாடசாலைகளுக்குச் செல்வதைத் தவிர்த்து சுகயீன விடுமுறையை எடுத்து எதிர்ப்பைக் காட்டுவதுடன் கொழும்பில் இடம்பெறும் போராட்டத்திலும் கலந்து கொள்ள வேண்டும். அதிலும் தேசிய ரீதியாக நடைபெறுகின்ற இந்த வேலை நிறுத்தம் மற்றும் போராட்டத்தில் வடக்கு மாகாணத்தில் இருக்கின்றவர்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு